Wednesday, April 21, 2010

நரகத்திற்குச் செல்லும் நான்

 சில மணிநேரங்கள் கண்களை மூடித் தியானநிலையில் இருக்கும் போது எல்லாமே வந்து விடுகின்றது. வந்தவற்றைக் கண்களைத் திறந்து மீண்டும் ஒரு முறை மீட்டுப் பார்க்க முயல்கையில் ஒன்று மற்ற நிலையே எஞ்சியிருக்கும். சில மணிநேரங்கள் கண்களை மூடித் தியானநிலையில் இருக்கும் போது எல்லாமே வந்து விடுகின்றது. வந்தவற்றைக் கண்களைத் திறந்து மீண்டும் ஒரு முறை மீட்டுப் பார்க்க முயல்கையில் ஒன்று மற்ற நிலையே எஞ்சியிருக்கும். திட்டமிட்டுச் செயல்படுபவர்கைளப் பார்க்கையில் வெறுப்பாக வருகின்றது. முறுக்கிவிட்டது போல் ஒவ்வொருநாளையும் ஒரே மாதிரி, மூன்று நேரம் சாப்பிட்டு, அதற்கிடைப்பட்ட நேரத்தில் வேலையும், உதிரி வேலைகளையும் செய்து முடித்து கட்டிலில் “டாண்” என்று அதே நேரத்திற்குச் சரிந்து, இன்று உடலுறவு கொள்ளலாம் என்று முன் கூட்டியே குறித்து வைத்திருப்பார்களோ என்னவோகம் என்பது இவர்களை இயக்கிக்கொண்டேயிருக்கின்றது. இவர்களும் இயங்கியபடியேயிருக்கின்றார்கள். பின்னர் நான் இப்படித்தான், இப்படித்தான் இருக்கப்போகின்றேன் என்று முடிவெடுத்த பியாராவது அடையாளப்படுத்தவோ, ஒரு கட்டத்துக்குள் அடைத்து விடவோ முயல்கையில் கோபம் வேகமாக வந்து போகின்றது. (போகின்றது என்றவரை சந்தோஷம்தான்) இன்று போல் நாளை வாழ மனம் ஒப்பா என்ற நிலையில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.


“சுஷானி” போது இந்தியாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தாலும், உருவம் அதற்குப்; பொருந்தாமல் இருந்தது. நிச்சயமாக ஐரோப்பா அதிலும் குறிப்பாக லண்டனிலிருந்து வந்திருப்பாள் என்று மனதுக்குள் பட்டது. இங்கிலாந்து மக்களுக்கென என் கணிப்பில் இருக்கும் அந்தக் கச்சிதமான உடை அலங்காரம் முழுமையாக அவளிடமிருந்தது. பொன்நிறத் தலைமயிரை கட்டையாக வெட்டியிருந்தாள். மிக நாகரீகமாக உடையணியும் பல்கலாச்சாரப் பெண்கள் மத்தியில், ஒரு அலுவலகத்திற்கேயான ஒழுங்கு முறையான உடையணிந்த அவள் கதைக்கும் போது ஆங்கிலத்தைச் சிரமப்பட்டுத் விழுங்கிய போதுதான் எனக்குள் சந்தேகம் எழுந்தது. எங்கிருந்து வந்திருக்கின்றாய் என்று கேட்டேன். ரஷ்யா, கனடா வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது என்றாள். நான் உடனேயே எழுந்து நின்று விட்டேன்.

விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த போது நாங்கள் சென்ற புகையிரதவண்டி கேரளாவைக் கடந்து செல்கையில் நான் யன்னலால் எட்டி எட்டி எதையோ தேட பொறுமை இழந்த என் கணவன் என்னத்தை அப்படி ஆவலோடு தேடுகிறீர் என்று கேட்டபோது மோகன்லால் அல்லது மம்முட்டி யாராவது கண்ணில் தட்டுப் படுகின்றார்களா என்று பார்க்கின்றேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இப்போது அந்தப் பட்டியலில் மீரா ஜாஸ்மீனும் சேர்ந்துகொண்டிடுள்ளார்.

நான் கலவரம் அடைந்து விட்டேன். “நீ பிறந்த ஊர் எது? யஸ்னயா போல்யனா விற்குச் சென்றிருக்கின்றாயா? “பிளேஸ் வித் த லிட்டில் கிறீன் ஸ்டிக்”; ஐப் பார்த்திருக்கின்றாயா? கேள்விகளை அடுக்கத் தொடங்கினேன். நான் எழுந்து நின்றதையும், என் விசித்திரமான கேள்விகளையும் கண்டு அவளும் கலவரம் அடைந்து என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் என்னை சுதாகரித்த படியே, இல்லை ட்ரோல்ஸ் ஸ்ரோய் என்றால் விசராகும் அளவிற்கு பிடிக்கும். அன்ட்ரூவையும், லெவினையும் உண்மையாக் காதலிப்பவள் நான் என்றால் நம்பவா போகிறாய்?. நான் நினைக்கிறேன் அன்ட்ரூவையும், லெவினையும் லியோ தன்னை வைச்சுத்தான் உருவகப் படுத்தியிருக்கின்றார் என்று. அப்பிடிப் பார்த்தால் உண்மையிலேயே நான் காதலிப்பது லியோவைத்தான் என்று நினைக்கின்றேன் என்றேன்.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே ஒரு லூசிடம் மாட்டிக்கொண்டு விட்டேனோ என்ற பாவனையில் முகத்தைத் திருப்பித் தனக்காக மேசை மேல் வைக்கப்பட்டிருந்த வேலைப் பத்திரங்களைக் கையில் எடுத்துப் புரட்டத் தொடங்கினாள் அவள். நான் அவமதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். என் மேசையின் பக்கம் திரும்பி ஒரு தமிழ் பாடலை முணுமுணுத்த படியே அவள் என் கேள்விகுப் பதில் சொல்லாது திரும்பிக் கொண்டது பெரிய பாதிப்பு ஒன்றையும் எனக்குத் தரவில்லைப் போல் காட்டிக்கொண்டு எனது வேலையில் மிக மும்மரமாக ஈடுபடத் தொடங்கினேன். நான் அவளுக்கு வேலையில் மூத்தவள். வயதில் நிச்சயமாகச் சின்னவளாகத்தான் இருப்பேன் என்றொரு நம்பிக்கை. வேலையில் சந்தேகம் வந்தால் நிச்சயமாக என்னிடம் தான் கேட்க வேண்டும் அப்போது பார்த்துக் கொள்கின்றேன் என்று என் காயப்பட்ட மனதிற்கு ஆறுதல் சொன்னேன். நான் மின்கணனியின் மேல் பார்வையைச் செலுத்தும் போது அவள் என் கடைக்கண் பார்வையில் விழுந்தபடியே இருந்தாள். ஒரு பத்திரத்தை அப்படியும் இப்படியுமாகப் புரட்டிய படி என் பக்கம் திரும்புவதும் பின்னர் அதிகாரியின் அறை பக்கம் பார்வையை ஓட்டுவதுமாகத் தடுமாறிக் கொண்டிருந்தாள். ஒரு கிழமை வேலைப் பயிற்சியை முடித்துக் கொண்டு மிக ஆர்வமாக முதல் நாள் வேலையைத் தொடங்கியவளுக்கு முதல் பத்திரமே சந்தேகத்தை எழுப்பி விட்டிருந்தது. நான் மனதுக்குள் குதூகலித்துக் கொண்டிருந்தேன். வழமையாக மற்றவர்களின் துக்கத்திலோ, சிரமத்திலோ குதூகலிக்கும் வன்மமான மனம் கொண்டவளல்ல நான். இன்று அப்படி உணர்வதில் எனக்குள் சங்கடமான ஒரு சந்தோஷம். சில நிமிடங்களின் பின்னர் என் மனச்சாட்சி என்னைத் தொல்லை செய்தது. நான் மிகவும் மும்மரமாக வேலையில் ஈடுபடுவதுபோல் பாசாங்கு செய்வதால் அவள் என்னைத் தொந்தரவு செய்யத் தயங்குகின்றாள். இல்லாவிட்டால் என்னிடம் ஏதாவது கேட்கப் போய் நான் பதில் சொல்லப்படாத கேள்விகளை மீண்டும் தொடரலாம் என்ற தயக்கம் கூட அவளுக்கு இருக்கலாம். நான் என் முதல்நாள் வேலை அனுபவத்தை மனதுக்குள் ஒருமுறை மீட்டுப் பார்த்தேன். எப்போதுமே என்மேல் அபரிமிதமான நம்பிக்கை கொண்டவள் நான். அதனால் சிலவேளைகளில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொண்டு மூக்கை உடைத்துக்கொள்வதும் உண்டு. ஒருகிழமை வேலைப் பயிற்சியின் பின்னர் இந்த மேசைக்கு நான் அனுப்பப்பட்டு முதல்பத்திரம் என் கைகளுக்கு வந்தபோது நானும் தடுமாறித்தான் போனேன். முதல் பத்திரமே என்னை முழுசிப் பார்த்தது. முதல்கோணல் முற்றும் கோணலாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் நான் முழித்திருக்கையில் நான் கேட்காமலே தானாய் வந்து கைகொடுத்தவர்கள் பலர். இப்போது நான் அனுபவசாலி. பலருக்கு உதவியிருக்கின்றேன். நீ என் பக்கத்து மேசைக்காறி. உனக்கு நான் உதவுவேன் என்ற நம்பிக்கையில் உன்னை ஒருவரும் நாடிவரப் போவதில்லை. என் உதவி உனக்கு நிச்சயம் தேவை என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் நீயாகக் கேட்க வேண்டும் என்று என் குரூரமனம் ஏனோ என்னை உனக்கு நானான உதவுவதை இழுத்துப் பிடிக்கின்றது.

ஏதாவது ஒரு உரையாடலுடன் அவளுக்கு உதவி வேண்டுமா என்றரிந்து உதவு என்று என் நல்ல மனம் உத்தரவிட்டது. நான் ஒரு சுவிங்கத்தை எடுத்து ஒன்றை வாயிற்குள் போட்ட படியே இயல்பாக அவளின் பக்கம் ஒன்றை நீட்டினேன். இப்போதாவது அவள் இறங்கி வந்து என்னிடம் தானாக உதவி கேட்கின்றாளா என்று பார்க்கும் எண்ணத்தோடுதான் நான் அதைச் செய்தேன். அவள் சிநேகிதமாய் சிரித்த படியே ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னாள். எல்லாம் சரியாக இருக்கிறதா? சந்தேகம் ஒன்றும் இல்லையே என்று கேட்டேன். தடுமாறிய படியே பத்திரத்தை என்னிடம் காட்டித் தனக்கான சந்தேகத்தைக் கேட்டாள். நான் சந்தோஷத்துடன் அவளுக்கு விளக்கிக் கூறினேன். அவள் நட்போடு சிரித்த படியே நன்றி சொல்லி விட்டு வேலையை ஆரம்பித்தாள்.

உதவி பெற்றுவிட்டாள். இப்போது அவள் எனக்கு அடிமை. தேத்தண்ணி இடைவேளையில் போது அவளையும் அழைத்துக் கொண்டு ஓய்வு அறையின் பக்கம் சென்றேன். அவள் கண்களில் என்னுடன் உரையாடல் தொடங்குவதற்கான மிரட்சி தெரிந்தது. முதல் முதலில் ஒருவர் அறிமுகமாகும் போது இரண்டு நல்ல வார்த்தை பேச வேண்டும் என்பதை மறந்து நான் கேட்ட கேள்விகளுக்காக இப்போது வருந்தி, “உனக்கு எத்தனை பிள்ளைகள்?, என்ன பிள்ளைகள்?, எத்தனை வயது? என்ற உப்புச்சப்பில்லாத வழமையான கேள்விகளைக் கேட்டு அவளை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தேன். இருந்தாலும் என் முந்தைய கேள்விகளைச் சுற்றியே என் மனம் சுழன்றுகொண்டிருந்தது. தேனீரோடு ஒரு பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டுத் திரும்பவும் எமது இருக்கைக்கு வந்தோம். இப்போது அவள் என்னோடு ஒட்டிக்கொண்டு விட்டாள். கைப்பைக்குள் இருந்து தனது குடும்பப் படத்தை எனக்கு எடுத்துக் காட்டினாள். இரண்டு பெண்பிள்ளைகள். மூத்தவள் அண்மையில்தான் திருமணம் செய்ததாகச் சொன்னாள். மருமகனைத் தனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாள். விட்டால் வேலை எதையும் செய்யாமல் குடும்பக் கச்சேரி நடத்தத் தொடங்கிவிடுவாளோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்க, எனது “சீனியோரிட்டியை” இப்போது காட்டி அவளைச் சிறிது நோகப்பண்ணலாம் என்று என் சாத்தான் மனது சொன்னது. “வேலை நேரத்தில இப்பிடி அளவுக்கு அதிகமாக் கதைக்கக் கூடாது, அதிகாரி கவனித்தால் உனக்குத்தான் பிரச்சனை” என்றேன். அவள் முகம் சுருங்கிக் கொண்டது. உடனே மன்னிப்புக் கேட்டு விட்டு தன்வேலையைத் தொடங்கினாள். எனக்குத் திருப்தியாக இருந்தது. யாரையாவது அதிகாரம் பண்ணும்போது கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான். என் கணவர் எதற்கு வேண்டாததற்கெல்லாம் என்னை அதிகாரம் பண்ணுகின்றார் என்பது இப்போது புரிந்தது.

தொடர்ந்து வந்து நாட்களில் அவள் தனக்கான வேலைத்தள நண்பியாக என்னை வரிந்து கொண்டாள். அவளை நான் வெறும் “தொல்லை” என்பதாய்க் காட்ட முயன்றாலும் அவள் என்னைச் சுற்றிசுற்றி வருவது எனக்கும் பிடித்திருந்தது. எங்கள் ஆங்கில அறிவு ஒருவருக்கொருவர் ஒத்துப் போவதாய் இருந்தது. அவளுடைய உச்சரிப்பு எனக்கு விளங்கவில்லை என்று நக்கலாக நான் சொல்வதுண்டு. புலிக்கு (நாலுகால் மிருகம்) வாலாய் இருப்பதை விடப் பூனைக்குத் தலையாய் இருக்கலாம் என்று மனம் சொன்னது. என் உச்சரிப்பு அவளுக்கும் நகைப்பாய் இருக்கின்றது என்று தெரிந்த போது எனக்குள் கோபம் எழுந்தது. எத்தனை வருடங்கள் கனடாவில் வாழ்ந்தாலும் று க்கும் ஏ க்குமான உச்சரிப்பு வித்தியாசம் விளங்கமாட்டேன் என்கிறது. கனேடியர்கள் முன்நிலையில் சரியாக உச்சரிக்கின்றோமா என்ற தயக்கத்தோடு கதைப்பதை விட அவளோடு கதைப்பது சுலபமாகவிருந்தது. இருந்தும் ஏதாவதொரு காரணம் கண்டுபிடித்து அவளை மட்டம் தட்டி அவள் முகம் சுருங்கிப் போவதைக் கண்டு வக்கிரமாகத் திருப்திப்படுவதுமுண்டு. சிலவேளைகளில் அவள் முகம் சுண்டிப்போவதைக் கண்டு என் மனமும் நொந்து போகும். எதற்காக நான் இப்படி நடக்கின்றேன் என்று என்னை நானே கேட்பதுமுண்டு. அவள் ஒரு பிற்போக்குவாதி முட்டாள்தனமாக எதையாவது புசத்துவாள். நான் ரோல்ஸ் ரோய், தவ்தஸ்வாக்கி, சிமோன்தி பூவா. பிரேட்ய் அது இதுவென்று வாசித்துத் தள்ளும் ஒருமுற்போக்குவாதியாக இருந்துகொண்டு எதற்காக இந்தச் சின்னத்தனம். அவள் பிற்போக்குவாதி குறை உடையவள். நான் முற்போக்குவாதி அனைத்தையும் அறிந்தவள். எனவே குறை உள்ள ஒரு உயிரினத்தை நிறைவான ஒரு மனிதன் காயப்படுத்த மாட்டான் என்று நான் கண்டுபிடித்த தத்துவத்தின் மூலம் எனக்குள்ளேயே “அவளை மனம் நோகப்பண்ண மாட்டேன்” என்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன்.

அவளுக்கும் எனக்கும் சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் போட்டி இருந்தது. சின்னச்சின்ன விஷயங்கள் என்று சொல்வதைவிட உப்புச்சப்பில்லாத விஷயங்கள் என்று சொல்வதுதான் சரி. எப்படிப்பட்ட விஷயங்களுக்குப் போட்டி போடுவது என்று விவஸ்தையே இல்லாமலே போட்டிபோட்டுக்கொண்டிருந்தோம். அவளிலும் பார்க்க எனக்கு சிறிது ஐ.கியூ கூடுதலாக இருக்கிறது என்றே நம்புகின்றேன். எங்கு எப்படி அவளை அடிக்கலாம் என்று புரிந்து வைத்திருந்தேன். எனது சத்யபிரமாணம் அவ்வப்போது மறந்து போகும். ஐம்பதை எட்டிக்கொண்டிருக்கும் இருவருக்கிடையிலும் யாருக்குக் குறைவாக நோய் என்பதில் போட்டி. “நாரி சரியாக நோகுது” என்று அவள் சொன்னால், “நான் நல்ல ஃபிட்” என்று நான் சொல்வேன். “எனக்கு இண்டைக்கு டொக்டரிடம் அப்பொன்ட்மென்ட்” என்று நான் சொன்னால் அவள் கண்கள் மின்ன கத்தை சோகமாக வைத்துக்கொண்டு “உடம்புக்கு என்ன என்பாள்”, அவள் உள்ளம் வேண்டுவது ஏதாவது ஒரு கொடிய நோயைத்தான் என்று எனக்குப் படும், நான் மிக இயல்பாக முகத்தை வைத்து, மார்பகத்தில் தட்டுப்படும் கட்டியால் ஒருகிழமையாகத் தொலைத்த நித்திரையையும் மறைத்து “சும்மா ஒரு செக்கப்” என்பேன். மதியநேரம் சாப்பாட்டு வேளையில் யார் என்ன சாப்பாடு என்பதிலும் போட்டி. மிளகாய்த்தூள் உடம்புக்குக் கூடாது என்பாள் அவள். எங்கள் மசாலாப் பொருட்கள் மேல் மோகம் கொண்டுதான் ஐரோப்பியர்கள் எமது நாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள் அது தெரியுமா உனக்கு என்று அவளை நான் மடக்குவேன். உங்கள் உணவு எந்தவிதமான உப்புச்சப்பும் இல்லாமல் இருக்கிறதே எப்படித்தான் சாப்பிடுகின்றீர்களோ ன்று அலுத்துக் கொள்ளுவேன். என் அதிரடிகள் தாங்காது அவள் மௌனமாவாள். எனக்கும் கவலையாக இருக்கும். வாழ்க்கையில் என் கணவன், குழந்தைகளோடு செலவிடும் நேரத்தைவிட அவளோடு நான் செலவிடும் நேரமே அதிகம். அவளோடு சுமூகமான உறவு ஒன்றை மேற்கொள்வதை விடுத்து எதற்காக இத்தனை காழ்ப்புணர்வு. எங்கள் கணவர்கள் பற்றியும் எங்களுக்குள் போட்டி. இந்த விடையத்தில் நான் கொஞ்சம் “வீக்”. என் முற்போக்குப் பெண்ணியச்சிந்தனை என்பனவற்றில் உணர்ச்சிவசப்பட்டு என் கணவனின் அதிகார குணம் பற்றிப் போட்டு உடைத்து விட்டேன். அவள் நிதானமாக ஒரு சம்மனசுபோல் புன்னகைத்தபடியே “என் கணவன் மிகவும் நல்லவர். அவரைப் போல ஒரு நல்ல கணவன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கின்றேன். நான் வாழ்வில் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். நான் மிகவும் அதிஷ்டசாலி, அதிஷ்டசாலி” என்றாள் கண்களை மயங்குவது போல் மூடி மூடித் திறந்து. எனக்கு யாரோ அம்மிக்குளவியைத் தலையில் தூக்கிப் போட்டதுபோல் இருந்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் உனது குடும்ப அங்கத்தவரைப் பற்றிக் குறைகூறாதே. எல்லா வீட்டின் அலுமாரியிலும் எலும்புக்கூடுகளே உள்ளன, ஆனால் ஒருவரும் கதவைத் திறந்து காட்டப் போவதில்லை. உண்மை பேசுகின்றோம், நேர்மையாக இருக்கின்றோம் என்று முட்டாள் தனமாக உன் அலுமாரியின் எலும்புக் கூடுகளை வெளியே எடுத்துப் போடாதே. எனது சகோதரியின் கூற்று என் மண்டையில் தட்டியது.

சில கிழமைகளுக்கு முன்புதான் ஒரு வெள்ளிக்கிழமை நான் தொலைபேசி மூலம் ஆங்கில நாடகம் ஒன்றிற்கான பற்றுச்சீட்டுப் பதிவு செய்த போது ஒட்டுக் கேட்டவள் போல், நான் தொலைபேசியை வைத்தவுடன் என் அருகில், மிக அருகில் வந்து “எங்கே போகின்றாய்?” என்றாள். “வேலை முடிய நாடகம் ஒன்றிற்குப் போகப் போகின்றேன் வெள்ளிக்கிழமைகளில் பத்து டொலருக்கு டிக்கெட் கிடைக்கும் நீயும் வருகின்றாயா?” என்று கேட்டேன். அதிர்ந்தவள், “தனியாகவா போகின்றாய்?” என்றாள். “ஓம்” என்ற எனது பதில் அவளுக்கு மேலும் அதிர்சியைத் தந்திருக்க வேண்டும், “உன் கணவன் இதற்கெல்லாம் சம்மதிப்பாரா?” என்றாள். “அனுமதி கேட்டால் சம்மதம் கிடைக்காது, அறிவித்து விட்டுப் போகப் போகின்றேன்” என்றேன். அவள் முகம்; சுருங்கிக் கொண்டது. “என் வீட்டில் ஒரு கொலையே விழும் என்றாள்”. அங்கொங்கும் இங்கொங்றுமாக அவளுடனான உரையாடல்களில் இருந்து சேகரித்ததகவல்களின் படி “இப்பிடி ஒரு அருiமாயன(நல்ல) கணவனை அடைய நான் கொடு;த்து வைத்திருக்க வேண்டும்” என்ற “டயலாக்” இற்குச் சிறிதும் பொருந்தாதவர் அவள் கணவன் என்பது என் அனுமானம். இன்று அனைத்தைம் மறந்து தன் கணவனை உயரே உயர்த்திச் சுழற்றுகின்றாள்.

தான் அதிஷ்டசாலி, அதிஷ்டசாலி என்று அவள் கூறியதைத் தொடர்ந்து என் முகம் போன போக்கில் நான் பெரியதொரு தாக்குதலுக்கான வார்த்தைகளைச் சேகரிக்கின்றேன் என்று அவள் ஊகித்துக் கொண்டவளாய் உடனேயே அந்த இடத்திலிருந்து விலகிக் கொண்டாள். என் மனம் பாம்புபோல் சீறிக்கொண்டிருந்தது. “ப்பிச்” வாயுக்குள் முணுமுணுத்துக் கொண்டு இனிமேல் இவளோடு நான் சேரப்போவதில்லை என்று அருவரிப் பிள்ளைகளைப் போல் முடிவெடுத்துக் கொண்டேன். அன்று மீதியிருந்த நாட்களில் வேலையில் என் மனம் ஓடவில்லை. இவளை ஏதாவதொரு வழியில் தாக்கிவிடவேண்டும் என்று என் மனம் திட்டம் போட்டது. அவ்வப்போது என்ன ஆச்சு உன் சத்தியபிரமாணம்? என்று என் சாத்தான் மனம் அடித்துக்கொள்ள, அவளைத் தாக்குவதென்று முடிவெடுத்த பின்னர் அதனைச் சரியென்று சரிப்படுத்துவதற்கான காரணத்தை என் மனம் தேடித் தேடிக் களைத்துப் போனது. கோவத்தால் கனைத்துக் கொண்டிருந்த மனதோடு அன்றைய நாள் முழுக்க அநியாயமாகிப் போக இதன் மிகுதியை வீட்டிற்கும் இழுத்துச் சென்று கணவர், குழந்தைகளிடமும் சீறப் போகின்றேன்.

அதன் பின்னர் அவளைத் தவிர்த்து ஆனால் அவளின் காதுகளில் படும்படி, என் கணவர் எனக்காகச் சாப்பாடு கட்டித்தந்திருக்கின்றார், இன்று நான் போட்டிருக்கும் உடை என் கணவர் எனக்காக வாங்கி வந்தது, நேற்று வேலையிலிருந்து வீட்டிற்குச் சென்ற போது இரவு உணவு மேசையில் மெழுகுதிரி சகிதம் இருந்தது, அருகில் பூக்கொத்து வேறு என்று இல்லாத கற்பனையில் எனது ஒண்டுக்கும் உதவாத கணவனை மற்றவர்களுக்குப் புழுகித் தள்ளிக்கொண்டிருந்தேன். அவர்களும் ஆ.. ஓ.. என்று என் சந்தோஷத்தில் பங்கெடுத்துகொண்டார்கள். “அப்படி என்ன அற்புதம் அவருக்கு நீ செய்து விட்டாய்?” என்ற கேள்வி வேறு, நான் பொய்யாக வெட்கப்பட்டுக் கொண்டேன். சுஷானிக் வாயுக்குள் சிரித்துக் கொள்கின்றாளோ என்ற சந்தேகம் அடிக்கடி எனக்குள் வந்து போகாமலில்லை. என் சின்னத் தனம் என்னைக் கேலி செய்தது. உன் பெண்ணியம் இதுதானா என்ற கேள்வி அடிக்கடி என் மனதுக்குள் எழாமலில்லை.

தொடர்ந்து வந்த நாட்களில் அவளோடு வழமைபோல் நேரத்தைச் செலவிட்டாலும் இருவருக்குமிடையில் ஒரு மௌனப்போர் நிகழ்ந்துகொண்டிருப்பது உணரமுடிந்தது. தாக்குதல் எதிர்த்தாக்குதல் என்று அகோரமாகப் போய்க்கொண்டிருந்தன நாட்கள். அவள் ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்குத் தவறாமல் கோயிலுக்குப் போய் வருவாள் என்பதை அறிந்து கொண்டு “நீ எதற்காகக் கோயிலுக்குத் தவறாமல் போகின்றாய்?” என்று கேட்டு வேண்டுமென்றே அவளை வம்புக்கிழுத்தேன். “என்ன நீ தெரியாத மாதிரிக் கேட்கின்றாய்? நீ எதற்காக உங்கள் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்கின்றாயோ அதே போல்த்தான் நானும் எங்கள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்” என்றாள். “நான் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்வதாக யார் உனக்குச் சொன்னார்கள்?” என்றேன். மௌனமானாள். குழம்பியநிலையில் என்னைப் பார்த்தாள். ஒரு பெண், ஒரு மனைவி, ஒருதாய், கோயிலுக்குப் போகாமலிருப்பது எவ்வளவு சாத்தியம் என்பது அவளது கற்பனைக்கு எட்டாவிடையம். கண்கள் கொஞ்சம் பனித்திருக்க (என் கற்பனையோ என்னவோ) “நீ உங்கள் கோயிலுக்குப் போய்ப் பிரார்தனை செய்வதில்லையா?” என்றாள். இல்லை என்பதாய் நான் தலையசைத்தேன். “அப்ப வீட்டிலா பிராத்திக்கின்றாய்? கோயிலுக்குப் போய்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லைத்தான்” என்றாள் மிகவும் புரிந்துணர்வு கொண்டவள் போல். “நான் பிரார்த்திப்பதே இல்லை, எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, நான் ஒரு நாஸ்த்திகை” என்றேன். அதிர்ந்து போய் நம்பிக்கையின்மையோடு என்னைப் பார்த்தாள். நான் பெருமையாய்ச் சிரித்தேன். அவள் கண்கள் சாந்தமாக மிளிர்ந்தது. மீண்டும் ஒரு சம்மனசு போல்க் காட்சியளித்தாள். பாவப்பட்ட என்னை கடவுள் மன்னிப்பார் என்பது போல் அவள் பார்வை இருந்தது. “ஆண்டவன் அனைவரையும் மன்னிக்கும் அற்புதம் கொண்டவர், சொர்க்கம், நரகம் இரண்டில் எதற்குப் போகப் போகின்றோம் என்பதை நாங்கள் இப்போது பூமியில் வாழும் போதே தீர்மானித்து அதற்கேற்ப எமது வாழ்வை ஒழுங்குபடு;த்திக் கொள்ளுதல் வேண்டும், செய்யும் தவறு...” அவள் முடிக்கு முன்பே குறுக்கிட்டு “தற்போதைய வாழ்க்கையை நரகமாக்கி நான் இறந்த பின்னர் சொர்க்கம் போ வேண்டிய அவசியம் எனக்கில்லை, அதிலும் பார்க்க இப்போது சொர்க்கத்தை அனுபவித்து விட்டு, இறந்த பின்னர் நான் நரகத்திற்கே போய்க் கொள்கின்றேனே, இருந்தாலும் எனக்கு சொர்க்கம், நரகம், அதிலும் நம்பிக்கை இல்லை” என்றேன். தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.

அதன் பின்னர் அவள் என்னை முற்றாகத் தவிர்த்து மற்றய பெண்களோடு நெருங்கிச் செல்வது புரிந்தது. என் ஐ.கியூ மேல் எனக்கே சந்தேகம் எழுந்தது. அவள் என்னைத் தவிர்த்து, மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு எனது நாஸ்திகம் பற்றி வம்பு பண்ணுகின்றாள் என்று வேண்டாத கற்பனை எனக்குள் விஸ்வரூபம் எடுத்தது. நானறிந்து எனது அலுவலகத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஒருவருமில்லை. அந்தப் பேச்சுக்கே அங்கே இடமிருக்கவில்லை. வேண்டுமானால் உன்னுடைய கடவுளிலும் விட என்னுடைய கடவுள் மேல் என்ற விவாதத்திற்கு இடமிருக்கலாம்.

தொடர்ந்த நாட்களில் வெறும் காலை வணக்கத்தோடு எமது நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

2009ம் ஆண்டு பங்குனி மாதத்தில் ஒருநாள், குளிரோடு, சிறிது பனியும் வடிந்து கொண்ருந்தது. தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்திலும் ஈழப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருந்த நாட்கள் அவை. வேலை நேரத்தில் முடிந்தவரை மின்கணனியில் எமது நாட்டு நிலவரம் பற்றி அறிந்து கொண்டிருந்தேன். ஈழ மக்களின் நேரடிப்பாதிப்புக்கள் ஒளிநாடாக்களில் பார்க்க நேரிடுகையில் எழும் உணர்வைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் வேண்டா வெறுப்பாக அலுவலக வேலைளை அளைந்து கொண்டிருக்கும் கண்களும், கைகளும். எனது அலுவலகத்தில் இலங்கையர்கள் ஒருவரும் இல்லாததால், மனம் சோர்ந்து போகும் பொழுதுகளின் நண்பர்களுடன் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடிந்தது.

அன்று எனது அலுவலகம் அமைந்திருக்கும் பெருஞ்சாலையில் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கை கோர்த்து, பாதாகைகள் தூக்கி “எமது தலைவர் பிரபாகரன், எமக்கு வேண்டும் தமிழீழம்” என்று கோஷம் போட்டபடியிருந்தார்கள். நான் தலையைக் குனிந்த படியே அலுவலகத்திற்குள் நுழைந்து எனது இருக்கையில் இருந்த பின்பும் பல மணிநேரமாக எனது பதட்டம் குறையவில்லை.  பதட்டத்திற்கான காரணம் புரியவில்லை. நான் என்றும் உணராத நெஞ்சின் நெருடல் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. வெட்கமா? கவலையா?  இயலாமையா? அவமானமா?. மின்கணனியை அழுத்;திவிட்டு வெறுமனே இருந்தேன். சுஷானிக் வேகமாக வந்தாள். எனது தோளைத் தொட்டாள். “உனது நாட்டில் என்ன பிரச்சனை?,  ஏன் உன் நாட்டு மக்கள் கோஷம் போடுகின்றார்கள்?, நீ இது பற்றி ஒருநாளும் கதைத்ததில்லையே..” அவள் கேள்வி தொடர்ந்து கொண்டேயிருந்தது.  நான் அப்போதிருந்த மனநிலையில் உரையாடலைத் தவிர்க்க எண்ணி, “நீ தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்து அறிந்து கொண்டிருப்பாய் என்று நினைத்தேன்” என்று கூறிவிட்டு எனது வேலையில் கவனம் செலுத்துவது போல் பாவனை செய்தேன். “நீ ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை?, மேலதிகாரியிடம் சொல்லி விட்டு ஒரு மணித்தியாலம் ஆவது போய் வரலாம் தானே” என்றாள். எனக்குள் சினம் எழுந்தது. என் அப்போதான மனநிலை அவளோடு போட்டி போடவோ, விவாதம் பண்ணவோ சுமூமாக இயங்கவில்லை. இல்லை என்பது போல் வெறுமனே தலையை அசைத்தேன். அவளும் விடுவதாயில்லை “ஏன்?” என்றாள். கண்களில் சினம் பொங்க “ உனக்கு எங்கள் நாட்டு அரசியல் பற்றி என்ன தெரியும்?  என்றேன். அவள் மீண்டும் சாந்தமாகக் “கோவிக்காதே ஏதோ கொஞ்சம் விளங்குகின்றது, உன்னில் இருக்கும் அக்கறையில்தான் கேட்கின்றேன், அங்கே வெளியில் அந்தக் குளிருக்குள் நிற்பவர்கள் உன் மக்கள் தானே?, உன் இனம் தானே?, அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை உனக்கும் உள்ளதுதானே?  கதவைத் திறந்து கொண்டு வெளியில் இறங்கினால் நீயும் அவர்களில் ஒருத்தி, பின்னர் ஏன் கலந்து கொள்ளாமல் இங்கே நிற்கின்றாய்? என்றாள். நான் என்னைச் சாந்தப் படுத்திக்கொண்டு “எனக்கு அவர்கள் அரசியலோடு ஒத்துப் போவதில்லை, அவர்கள் செய்யும் போராட்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை, எமது மக்களுக்கான தலைவர் என்று குறிப்பிடும் அவரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றேன். அவள் மௌனமானாள். காலம் நேரம் பார்க்காமல் ஒரு பெரும்தாக்குதலுக்கு அவள் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தாள். கண்களைச் சுருக்கி என்னைச் சிறிது நேரம் பார்த்தாள். பின்னர் குரலைச் செருமிச் சரிப்படுத்திவிட்டு, நிதானமாக “நீ உனது கணவருக்குத் தெரியாமல் சிலவற்றைச் செய்யும் போது எனக்குள் சந்தேகம் இருந்தது, பின்னர் கடவுள் நம்பிக்கையில்லை என்றாய் அதையும் ஒருமாதிரித் தாங்கிக்கொண்டேன், ஆனால் இப்போது உனது மக்களுக்காக முதியவர்கள், சிறுவர்கள் என்று குளிருக்குள் நின்று வாடுகின்றார்கள் இப்போதும் உன் விதண்டாவாதத்தை நீ விடவில்லை. உனது மக்களுக்காகச் சிறிது நேரம் குளிருக்குள் நிற்க உன்னால் முடியவில்லை, உனது மக்களின் பாதுகாப்பிற்காக உன்னால் கடவுளிடம் இரங்கி வேண்ட முடியில்லை. நீயெல்லாம் ச்சீ.. நீ நரகத்திற்குப் போவது நிச்சயம்” பொரிந்து விட்டு தனது இருக்கையை இழுத்து என்னிலிருந்து மிகத் தூரத்தில் முடிந்தவரை தன்னை இருத்திக் கொண்டாள். ஒரு முழுமையான அதிர்வோடு, உடல்விறைக்க நான் அசையாது இருந்தேன்.

Tuesday, April 6, 2010

"திரை"

தற்கால இலங்கை அரசியலைத் தவிர்த்து எதையும் கலந்துரையாட சிந்திக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு அனைத்துத் தமிழ் மக்களும் தள்ளப்பட்டிருக்கும் காலம் இது.

சில வருடங்களுக்கு முன்பாயின் கனடாவில் பெண்களின் நிலை என்பதுதான் நினைவிற்கு வந்திருக்கும். அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பின் படி ஒன்றாறியோ மாகாணத்தில் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகும் பெண்களில் முன்நிலையில் நிற்பவர்கள் இலங்கைத் தமிழ் பெண்கள். பெண்கள் மீதான வன்முறை, தற்கொலைகள், கொலைகள் என்பன கடந்த ஆண்டுகளில் அதிகமான இடம்பெற்றுக் கனேடிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அண்மைக் காலங்களில் தமிழ் மக்களிடம் ஒரு இறுகிய மனநிலை காணப்படுகின்றது. எம்நாட்டுப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் எம்மவரிடையே நெருக்கமாக உறவை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.

இன்று என்னுடைய உரை இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்டு புலம்பெயர் தமிழ் மக்களிடையே அவதானிக்கக் கூடியதாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பண்பாட்டு மாற்றம் அதற்கான காரணங்கள் பற்றியதாகும்.

35வது இலக்கியச்சந்திப்பிற்காக எனக்குக் கொடுக்கப்பட்ட அல்லது நான் தெரிவுசெய்த தலைப்பு "சின்னத்திரை பெரியதிரை புகலிட சமூகப் பண்பாட்டில் ஏற்படுத்தியருக்கும் தாக்கம்" என்பதாகும். அதில் ஒரு சிறு மாற்றம் செய்து ஊடகங்களும் கனேடியத் தமிழ் சமூகமும் என்று மாற்றி அமைத்திருக்கின்றேன்.

ஊடகங்கள் எனும்போது அச்சு ஊடகங்களைத் தவிர்த்து மின்னியல் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, சினிமா என்பனவற்றில் மேல் எனது கவனத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.

இலங்கை ஒரு கலாச்சாரப் பாலைவனம் என இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஒருவர் கூறியிருந்தார். ஆனால் யாழ்ப்பாணந்தான் ஒரு கலாச்சாரப் பாலைவனம் என ஏ.ஜே கனகரட்னா 79ம் ஆண்டு றீகல் தியேட்டரில் இடம்பெற்ற ரூமேனியத் திரைப்படவிழா பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். பொழுது போக்குத் துறையை பொறுத்தவரை யாழ்ப்பாணம் போர் அடிக்கிறது அதனால்தானோ என்னவோ யாழ்ப்பாணத்தில் திரையரங்குகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன என்கின்றார் இவர். தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் தற்போது பொழுதுபோக்குப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை.

புலம்பெயர்வு என்பது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் ஒன்று. வரட்சி, நோய் காரணமாக உள்நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களும், கல்வி, தொழில் நிமித்தமாய் உள், வெளிநாட்டுகளில் புலம்பெயர்ந்த பலரும் இருக்கின்றார்கள். ஆனால் இப்புலப்பெயர்வுகள் அனைத்துமே மட்டுப்படுத்தப்பட்ட இடங்களுக்கும், நாடுகளுக்கும் அவரவர் தெரிவிலேயே இடம்பெற்றிருக்கின்றன. உதாரணத்திற்கு வடக்கிலிருந்து கிழக்கு, தெற்கு மாகாணங்களுக்கு தொழில் கல்வி நிமித்தமாகவும், தீவுப்பகுதிகளிலிருந்து வடக்கு தெற்கு பிரதேசங்களுக்கு வியாபார நிமித்தமாகவும் புலம்பெயர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். வெளிநாட்டுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் என்று பார்க்கும் போது தொழில் நிமித்தமாய் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளையும், கல்வி நிமித்தமாய் லண்டனையும் குறிப்பாகச் சொல்ல முடியும்.

ஆனால் 80களின் பின்னர் அரசியல் சுதந்திரம், வாழ்தல் அல்லது இருப்பு, அடிப்படை உரிமை போன்ற காரணிகளுக்குகாக உலகளாவிய அளவிற்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு தெரிதல் என்பது இருக்கவில்லை. அனைத்தையும் துறந்து இருப்பு என்ற ஒன்றின் அடிப்படையில்தான் இந்தப் புலப்பெயர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
80களுக்கு முந்திய காலங்களில் இடம்பெற்ற புலப்பெயர்விற்கும், பிந்தைய காலங்களில் இடம்பெற்ற புலப்பெயர்விற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நோக்குவோம் ஆனால் 80களுக்கு முந்தைய காலங்களில் புலம்பெயர்ந்தவர்கள் புலம்பெயர்ந்த பின்னரும் தம்முடைய தாய்வழிச்சமூகத்துடன் கணிசமான அளவிற்கு தொடர்பை வைத்திருந்தார்கள். குடும்ப நிகழ்வுகள் (மரணவீடு, திருமணங்கள்) கோயில் திருவிழாக்கள், போன்றவற்றிற்கு சென்று வருதலோடு விடுமுறை என்பது தாய்நாடு செல்தல் என்பதாயே பலருக்கு அமைந்திருந்தது. (தமிழ்நாட்டுத் தமிழர்களின் தற்போதைய நிலை இதுவாகத்தான் இருக்கின்றது)
80களின் பின்னர் புலம்பெயர்ந்தோர் பலருக்கு தாய்வழிச் சமுதாயத்தினுடனான தொடர்பு முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையில் உறவுகள் எவருமற்ற நிலையில் உலகெங்கும் தெறிபட்டு வாழும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையை நாம் மிக உன்னிப்பாக நோக்குவோமானால் இப்புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தோள்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் பாரத்தை நாம் அவதானிக்க முடியும். அதாவது தமிழரின் தனித்துவமாகப் போற்றப்பட்டு பேணப்பட்டு வந்த பண்பாட்டைக் காக்கும் முக்கிய பழு இந்தப் புலம்பெயர் மக்களின் தோள்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றது. தாய்வழிச் சமூத்துடனான கணிசமாக தொடர்பு அறுபட்ட நிலையில், பண்பாட்டைப் பேணுவதற்கு முக்கிய அடித்தளமான மொழி மருகத்தொடங்கிய நிலையில், சமூகம் சிதறுண்ட நிலையில் பண்பாட்டைப் பேணப் போராடும் இலங்கைத் தமிழர்களின் கவனம் தமக்கு மிகநெருக்கமாக ஒத்ததாக இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பக்கம் முற்றுமுழுதாகத் திரும்புகின்றது.

இலங்கைத் தமிழர்கள் எப்போதுமே மாற்றங்களை இலகுவில் உள்வாங்கி ஏற்றுக் கொள்பவர்களான இருக்கின்றார்கள். காலனித்துவத்தின் பிந்தைய காலங்களைப் பார்த்தோமானால் தமிழ்நாட்டு மக்களிடையே மேற்கத்தைய நாகரீகம் ஏற்படுத்திய தாக்கத்தை விட இலங்கைத் தமிழர்களிடம் அதிக தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்பட்டிருக்கின்றது. (ஒரு சிறு உதாரணம் கூற வேண்டுமாயின் தமிழ்நாட்டில் இன்றும் உயர்பாடசாலைகளில் தாவணி போடாமல் செல்ல முடியாத நிலை இருக்கின்றது.)


இலங்கையில் இருக்கும் போது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமக்கான பிரத்தியேகமான வாழ்க்கை முறையையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து வந்த மக்கள், புலம்பெயர்ந்து கனடா போன்ற பல்கலாச்சார நாடொன்றிற்குக் குடிபுகுந்தவுடன் அவர்கள் சிறிது சிறிதாக தமக்கான பிரத்தியேகமான பண்பாடுகளை இழக்கத்தொடங்கியுள்ளார்கள். ஒரு சமூகத்தின் ஊடாட்டமே பண்பாட்டை இயக்கத்தில் வைத்திருப்பதற்கு முக்கிய காரணமாகின்றது.
பிரதேச, வட்டார, கிராமிய, ஏன் வீதிகளுக்கான தனித்துவமான பண்பாட்டு அம்சங்களோடு வாழ்ந்தவர்கள் புலம்பெயர்ந்து இனம், மொழி, மதம், கலாச்சாரம், வர்க்கம் அனைத்திலும் தமக்கான அடையாளங்களுடன் ஒவ்வாதவர்களுடன் வாழத்தொடங்க அவர்களை அறியாமலேயே அவர்களது பிரத்தியேகமான அடையாளங்கள் அழியத் தொடங்கி விட்டன. ஒன்றை இழக்கும் போது ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப அவர்களுக்கான பிரத்தியேகமான ஒன்றை அவர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அபாயகரமான அந்த வெற்றிடத்தை நிரப்பும் பணியை கனேடியத் தமிழ் ஊடகங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கின்றன.

ஒரு சமூகத்தின் பண்பாட்டைப் பேணிக்காப்பதில் அந்நாட்டு அரசு மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. இலங்கைத் தமிழரின் பண்பாடு என்பது இலங்கை அரசின் ஆதவு இல்லாமலேயே பலஆண்டு காலமாக சமூக, கலாச்சார மொழியின் ஆதிக்கம் மூலம் தனக்கான ஒரு காத்திரமான இடத்தைக் தக்க வைத்துக்கொண்டிருந்தது. இலங்கை ஊடகங்கள்; மட்டுப்படுத்தப்பட்ட செய்திகளை தணிக்கைகள் செய்து வழங்கிவருவதனால் தாய்நாட்டுச் செய்திகளை முழுமையாக அறிந்து கொள்வதற்கான குறைந்த பட்ச உரிமையும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை புலம்பெயர் ஊடகம் என்பது உலகளாவிய அளவில் பரந்திருக்கும் தமிழரிடையேயான தொடர்பாடல் முறைமையில் முன்நிலையில் நிற்பதோடு புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க, வாசிக்க, பார்க்க வேண்டியவற்றைத் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தாமே தீரம்மானித்து வழங்கியும் வருகின்றன. தமிழ்ப் பண்பாட்டின் மேம்பாட்டின் முக்கிய காரணிகளின் ஒன்றாகவும் அடிநாதமாகவும் விளங்கும் தமிழ்மொழியின் பங்கு என்பது புலம்பெயர் தமிழரிடையே மருகிய நிலையில் அந்நியமொழியின் உதவியுடன் பண்பாட்டு காத்தலும் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றது. உதாரணத்திற்கு தம்கல்வி மொழியான ஆங்கிலத்தின் மூலம் மேடைப்பேச்சு, இசை, நடனம், நாடகங்கள் என்பனவற்றை அடுத்த சந்ததியினர் பயிலுகின்றார்கள்.
இது மிகப்பெரிய பரிதாபமான ஒருநிலையாகவே படுகின்றது. இவ்வேளையில்தான் புலம்பெயர் தமிழரின் பண்பாடு என்பது ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றுக்கொள்கின்றது எனலாம்.

மின்னியல் ஊடகம் எனும் போது முதலில் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டோமானால்,தமிழ்நாட்டுப் பெரியதிரை இலங்கை வாழ் தமிழரிடையே தாக்கங்களைக் கொண்டு வந்திருக்கின்றது என்பது உண்மையாயினும் அத்தாக்கங்கள் அதிகம் புறநிலைத்தாக்கமாகவே இருந்திருக்கின்றது. நடப்பியல் மெய்மையைப் புறக்கணித்து இயல் முரண்பட்ட கற்பனாவாதத்தில் இளையோர் திளைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும். உதாரணத்திற்கு இளம்சமுதாயம் கதாநாயகர்கள் போல் உடையணிந்து நாயகத்துவத்திற்குள் தமைக் கொண்டு செல்ல முயன்றிருக்கின்றார்கள். பெரியதிரை என்பது குறுகிய நேரத்திற்குள் யதார்த்தத்திற்குப் புறம்பான வாழ்வுக்கு ஒவ்வாத ஒரு கதையை திரையில் சொல்லி முடித்து விடுவதால்; அவை எப்போதுமே ஒரு பொழுது போக்கு ஊடகமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது.

அதேவேளை புலம்பெயர் இளம்சமுதாயத்தில் பெரியதிரை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்று பார்க்கும் போது பல்கலாச்சார நாடான கனடாவில் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் பல்கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறும் போது இலங்கைத் தமிழ் இளஞர்கள் தமது கலைநிகழ்வாக திரைஇசை நடனங்களையே முன்வைக்கின்றார்கள். இந்நடனங்களை வழங்குவதற்காகப் பணமாதங்கள் நடன ஒத்திகை பார்க்கின்றார்கள். அதேவேளை இவர்களது உடை அலங்காரங்களைப் பார்த்தீர்களானால் திரையில் நாயகர்கள் எப்படியான உடையணிந்து அலங்காரம் செய்திருந்தார்களோ அதை வகையைத்தான் இவர்களும் தெரிவ செய்திருப்பார்கள். நடன அசைவுகள் கூட இவர்களது கற்பனையில் திறமையில் இருந்து வெளிப்படாமல் திரைப்படப்பாடலை அப்படியே ஒத்திருப்பதாகவே அனேகமாக அமைந்திருக்கின்றது. எனவே இவர்களது ஒத்திகை பார்க்கும் நேரம், உடை அலங்காரங்களுக்கான செலவு ஒருபுறம் இருக்க கற்பனைத் திறன் என்பது கூட மட்டுப்படுத்தப்படுகின்றது. தற்போது ரொரொன்டோவில் பகுதி நேர வேலையாக நடனக் குழுக்கள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. பல ஊர்நிகழ்வுகள், பழைய மாணவர் சங்கநிகழ்வுகளிற்கு இவர்கள் நடனத்திற்காக அழைக்கப்படுவதுண்டு. அத்தோடு திரைஇசை நடனத்தை மட்டும் கொண்டு வருடா வருடம் இடம்பெறும் கலைநிகழ்வுகளும் உண்டு. உதாரணத்திற்கு வசீகரா, மின்னலே.

அதேவேளை திரைஇசை நடனத்தை இழிந்த வடிவமான கடும் தூய்மைவாதிகளான யாழ்ப்பாணியப் பெற்றோர் நோக்கியதால் தம் பிள்ளைகளுக்கு கர்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும் கற்பித்துப் பெருமைப்பட்டு;கொள்கின்றார்கள். இவ்வொழுக்கவாதிகள்தான் புலம்பெயர் மக்;களிடையே மரவுவழி வந்த பண்பாட்டினைப் பாதுகாக்கும் காவலர்களாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். மருகத்தொடங்கி விட்ட பல பிற்போக்குச் சம்பிரதாயங்களையும், பண்பாடுகளையும் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான்.

பெரியதிரை ஏற்படுத்திய பாரிய தாக்கம் ஏது என்று பார்த்தால் மற்றைய அனைத்து ஊடகங்களையும் இது ஆக்கிரமி;த்துக் கொண்டிருக்கின்றது. அச்சு ஊடகங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகளோடு மின்னியல் ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி, போன்ற அனைத்துமே தமிழ்நாட்டுப் பெரியதிரையை விளம்பரப்படுத்தி ஆராய்வதிலேயே தமது நேரத்தையும் பக்கங்களையும் செலவிட்டுக்கொண்டிருக்கின்றன. இன்று வருடத்திற்கு 4 அல்லது 5 முழுநீளத்திரைப்படங்கள் இலங்கைத் தமிழர்களால் கனடாவில் எடுக்கப்பட்டு திரையிடப்படுகின்றன. இத்திரைப்படங்கள் அனேகமாக தமிழ்நாட்டுத் திரைப்படங்களின் பாதிப்பபைக் கொண்டு அமைந்திருக்கின்றன. (பாடல்கள் சண்டைக் காட்சிகள்)
பெண்ணிய நோக்கில் பெரியதிரையை ஆராய்ந்தோமானால் அனைத்துப் படைப்புக்களுமே பெண்ணை இரண்டாம் பிரஜையாகவும், ஒரு பாலியல் பிண்டமாகவும் பிரகடனப்படுத்துவதிலேயே முன்நிற்கின்றன. அத்தோடு சாதியம், மதம் என்பனவற்றை ஊக்கவிக்கும் ஒரு ஊடகமாக இது விளங்குவதனால் எமது அடுத்த சந்ததியினர் பிற்போக்குவாதிகளாக உருவாகும் அபாயமும் உள்ளது. அதேவேளை தமது குழந்தைகள் தமிழை மறந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் படங்களை முழுநேரமாக வீட்டில் ஓடவிட்டு அவர்களைப் பார்க்க விடுகின்றார்கள். தமிழ்நாட்டுத் தமிழோடு சேர்த்து சமுதாயத்தின் அத்தனை பின்போக்குத் தனங்களையும் வன்முறைகளையும் புலம்பெயர் தமிழ் குழந்தைகள் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியத் தமிழ் திரைப்படமும் புலம்பெயர் தமிழர்களும்-
“நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள். இந்த மூன்று திரைப்படங்களி ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே. நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள். ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்?
இதற்கான முக்கியகாரணம் இன்றைய இந்திய தமிழ் சினிமா புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை மிகவும் நம்பியிருக்கின்றது. 80, 90களில் உருவான திருட்டு வீ.சீ.டி விற்பனையும் அதன் பின்னர் சின்னத்திரையின் வரவும் தமிழ் சினிமா உலகை ஆட்டம் காண வைத்தது. திரைப்படத்துறையிலிருந்து பலரும் பகிரங்கமாக உரைகள் நிகழ்த்தி திருட்டு வீ.சீ.டியில் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களைக் கெஞ்சிக் கேட்கும் அளவிற்கு இறங்கியும் வந்திருந்தார்கள். தொடர்ந்த வருடங்களில் உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் இந்தியத் தமிழ் திரைப்படங்களை திரையரங்குளில் திரையிடத் தொடங்கியதும் அவர்கள் தமிழ் சினிமா மீண்டும் உயிர்ப்பெற்றது. தமிழ் சினிமாவை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள ஈழத்தமிழர்களை தடவிக்கொடுக்கின்றார்கள் இந்திய இயக்குனர்கள். இது முற்று முழுதான வியாபார தந்திரம் இதில் தவறொன்றுமில்லை.
ஈழத்தமிழரும் பாட்டும், சண்டையும் நிறைந்த படங்களைத்தான் வேண்டி நிற்கின்றார்கள். ஈழத்தமிழருக்கும் நடக்கும் அநியாயங்களை வெறுமமே விவரணப்படமாக எடுத்தால் ஈழத்தமிழர்கள் கூட அதனைப் பணம் கொடுத்து வாங்கிப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில்;தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் வாழ்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க இந்திய சினிமாக் கலைஞர்களிலிருந்து, சின்னத்திரைக் கலைஞர்கள் வரை வருடா வருடம் ஈழத்தழிழர்களினால் உலகெங்கும் உலாப் போகின்றார்கள். கலைஞர்களை அழைத்துக் கௌரவிப்பது என்பது நல்ல விடையம்தான், ஆனால் சினேகாவோடு சினேகாவின் அம்மா, சியாமோடு சியாமின் அம்மா என்று குடும்பமாக வந்து பணம் பெற்று ஊர் சுற்றிப்பார்த்துச் செல்வதோடு, கடைகடையா ஷொப்பிங் சென்று ஈழத்தமிழ் இளிச்சவாயர்களை ஒன்று இல்லையென்று ஆக்கிவிட்டுப் பறந்து போகின்றார்கள். கிரடிட் காட்டை அடித்து அடித்து சினேகாவிற்கு ஷொப்பிங் செய்துகொடுத்து விட்டு அந்த பெருமையோடு காலத்தைத் தள்ளுகின்றார்கள் இவர்கள்.

இந்தியக் கலைஞர்களை கனடாவிற்கு அழைத்து நிகழ்ச்சி செய்து அதனால் எம்மவர் ஏதாவது உழைக்கின்றார்கள் என்றால் அது வியாபாரம் என்று விட்டுப் போகலாம். ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெறும் தற்பெருமைக்காக பெரும் பணத்தைக் கொட்டி தமிழ் சினிமாக்காறர்களை மேலும் மேலும் கொழுக்கப்பண்ணுகின்றார்கள். ஈழத்தமிழர்கள் இளிச்சவாய்கள், எங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கண்டு கொண்ட சினிமாக் கலைஞர்களும் முடிந்தவரை எம்மவரிடமிருந்து வறுகிக்கொண்டு பறந்து விடுகின்றார்கள். சினிமாக்காறர்களைக் கூப்பிட்டு நொடிச்சுப் போன எம்மவர்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈழத்தமிழர்களின் கடைகளெல்லாம் இந்தியக் கலைஞர்களின் வருகையை அறிவிக்கும் துண்டுப்பத்திரங்களினால் நிறைந்து வழிகின்றது, சின்னத்திரையில் மிமிகிரி செய்யும் வெட்டிப் பெடியங்கள் கூட பணம் பெற்று கனடா சுற்றுலா வந்துவிட்டுப் போகின்றார்கள். புலம்பெயர் ஈழத்தமிழர்களால் தமிழ் சினிமாவிற்கு விடுதலை கிடைத்து விட்டது என்பது தான் உண்மை.
அடுத்து சின்னத்திரையை எடுத்துக் கொண்டால். பெரியதிரை இளம் சமுதாயத்தினரை கவர்ந்தது போல் சின்னத்திரை மூத்தவர்களைக் கவர்ந்திருக்கின்றது. கனடாவில் தமிழர் அதிகமாக வாழும் பிரதேசமான ரொறொன்டோ நகரத்தை அண்மித்த பகுதிகளில் நூற்றிற்கும் அதிகமான வீடியோ கடைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. 15இற்கு மேற்பட்ட தொடர்நாடகங்கள் நூற்றுக்கு மேற்பட்ட வாரத் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றது. தமிழர்;கள் அதிகம் வாழும் ஸ்காபுரோ, மார்க்கம், மிசிசாகா, ரொறொன்டோ நகரப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களில் அனேகமாக வீடுகளில் குறைந்தது ஐந்து நாடகங்களாகவது தொடராகப் பார்க்கப்பட்டு வருகின்றன. வெளியாகும் அனைத்து நாடகங்களையும் பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள். முதியவர்கள், வேலைக்குப் போகதா பெண்கள் இருக்கும் வீடுகளில் பகல் பொழுதுகளில் தொடராக நாடகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பெரியதிரைபோல் இல்லாது சின்னத்திரை சமூகம், குடும்பம் சார்ந்த திரைக்கதையைக் கொண்டிருப்பதனால் இது நடுத்தர வயதுதினரின் கவனத்தை அதிகம் ஈர்பதாகவுள்ளது.
பெரியதிரையில் கனவு நாயகர்களாகப் பரிணமித்த கதாபாத்திரங்கள், சின்னத்திரையில் தம்குடும்ப அங்கத்தவராகவோ, பக்கத்து வீட்டினராகவோ பார்வையாளர்களால் உணரப்படுகின்றார்கள். சின்னத்திரையின் பாத்திரங்கள் புலம்பெயர்ந்த பலதமிழ் குடும்பங்களின் அங்கத்தினராக வாழ்கின்றார்கள். பெரியதிரை புறநிலைத்தாக்கங்களை புலம்பெயர் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது என்றால், சின்னத்திரை அகநிலைத்தாக்கங்களையே அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம். சின்னத்திரையின் பாதிப்பால் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டில் கணிசமான அளவு மாற்றங்கள் ஏற்படத்தொடங்கி விட்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு குழந்தையை தொட்டிலில் இடுதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு, பூப்புனிதநீராட்டு விழாவின் போது ஊஞ்சலில் இருத்தி ஆட்டுதல். இதைத்தவிர இன்னும் தமிழ் சம்பிரதாயங்களில் என்றும் கண்டிருக்க முடியதா பல சடங்கு முறைகள் தாமாகவே தோன்றிக்கொண்டிருக்கின்றன.
இவற்றோடு வடஇந்திய மக்களின் கலாச்சரம் பண்பாடுகள் மெல்லமெல்ல தமிழ்நாட்டிற்குள் நுழைந்து சின்னத்திரை பெரியதிரை மூலம் புகலிடத் தமிழ் மக்களையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.

இறுதியாக தமிழ் தொலைக்காட்சியைப் பார்த்தோமானால் - இது என் சொந்த அனுபவமாக அமைந்திருக்கும். நான் வேலை செய்த தமிழ் தொலைக்காட்சி நிலையம் தன்னைச் சமூகத் தொலைக்காட்சியாக அடையாளப்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கின்றது. கனடாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி “நேர்கொண்டபார்வை” எனும் ஒரு நிகழ்வை நான் நடாத்தி வந்தேன். மூன்று நான்கு நிகழ்வு ஒளிபரப்பின் பின்னர் நிகழ்ச்சி நிலையப் பொறுப்பாளர்களால் இந்நிகழ்வு நிறுத்தப்பட்டது, அதற்கு அவர்கள் கொடுத்த காரணம், ஆண் பார்வையாளர்களுக்கு நிகழ்வு பிடிக்கவில்லை என்பதே. அதன் பின்னர் சினிமாப்பாடல்களை மையமாக வைத்து சில நிகழ்வுகளைச் செய்யும் பொறப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல சமையல்கலை, சிகை அலங்காரம் செய்வது எப்படிப் போன்ற எமது ஆண்கள் விரும்பும் பெண்களுக்கான நிகழ்வுகளையும் நான் நடாத்தினேன் என்பதை தற்போது வெட்கத்தோடு ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. கனேடியத் தமிழ் முற்போக்கு நாடகக் கலைஞரகளால் வருடாவருடம் நடாத்தப்படும் “அரங்காடல்”; எனும் நாடக நிகழ்விற்காக அரை மணிநேரம் ஒரு விவரண நிகழ்வை ஒளிபரப்ப நான் நிலையப் பொறுப்பாளர்களிடம் இரங்க வேண்டிய நிலையில் இருந்தேன். இந்தியத் தமிழ் நட்சத்திரங்களான மாதவனுக்கும், ரேவதிக்கும் இரண்டு மணித்தியாலத்தை அள்ளி வழங்கிய நிலையத்தவர்கள், கனேடியக் கலைஞர்களின் நிகழ்வு எனும் வரும் போது ஒளிபரப்பு நேரம் இல்லை என்று மறுத்துவிட்டார்கள். அதற்காக நான் வாதிட்ட போது மாதவனால் தாம் பணம் உழைப்பதாக கூச்சமின்றிக் கூறினார்கள், தமது தொலைக்காட்சி தமிழ் சமூகத்தொலைக்காட்சி என்றே அடையாளப்படுத்தி நிலையத்தை நடாத்தும் உரிமையை கனேடிய அரசிடமிருந்து பெற்றிருக்கும் இவர்கள் குறிப்பிட்ட நேரம் ஈழத்தமிழ் சமூகத்திற்காக ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், கோயில் பூசைகள், சில நேர்காணல்கள் என்பவற்றை பணம் பெற்று நடாத்தி அந்த நேரத்தை நிறைத்துக் கொள்கின்றார்கள். அதைத் தவிர அரசியல் நிகழ்வுகள் என்பன ஒருபக்கச் சார்பாகவே என்றும் அமைந்திருக்கும். “செய்திக் கண்ணோட்டம்” என்ற நிகழ்வில் யாராவது ஒரு அரசியல் ஆய்வாளர் தமது நடுநிலையான கருத்தை நிகழ்வில் கூறிவிடின் அவரது பெயர், அவர்களது பட்டியலில் இருந்து உடனேயே அகற்றப்பட்டு விடும். (இதனை முன் நின்று செய்தவர் அப்போதைய நிலையத்தின் பொறுப்பாளர். பின்னர் நிலையத்தின் பணத்தைக் கையாண்டதற்காக அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விடையம்) அவர் பின்னர் நிகழ்விற்கு அழைக்கப்படமாட்டார். ஆய்வாளர் அனைவருமே விடுதலைப்புலிகளுக்கு சார்பாகத் தாளம் போடுபவர்களாக இருந்தால் மட்டுமே நிகழ்சிக்கு அழைக்கப்படுவார்கள். கலந்து கொள்ளும் ஆய்வாளர்களும் அதற்குத் தருந்தால் போல் மக்களை வெறும் ஆட்டு மந்தைகளாக எண்ணி தமது ஆய்வை ஆய்ந்து விட்டுப் போவார்கள். கனேடித் தமிழ் மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத் தொலைக்காட்சியின் சேவை இது. இந்திய சினிமா, சின்னத்திரைகள், சினிமாவைத் தளமாகக் கொண்ட நிகழ்வுகள், ஈழப்போராட்டத்தின் பொய்யான பக்கங்கள் இவற்றை மட்டுமே கொண்டு மக்களின் சிந்தனையையும், அறிவையும் மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றார்கள். “மனோப்பொலி”யாக இவர்கள் இயங்கிக் கொண்டிருப்பதனால், சமூக நோக்கோடு தரமான நிகழ்வுகளை கொடுக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கூட இவர்களிடம் கையேந்த வேண்டிய நிலையிலேயே உள்ளார்கள் என்பது வெட்கப்பட வேண்டியதே.
இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் முற்போக்கான நிகழ்வுகளை (“இப்படிக்கு ரோஸ்”, “நீயா நானா”) துணிந்து நடாத்தி வரும் நிகழ்ச்சி பொறுப்பாளருடம் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தனக்குக் கொலை மிரட்டல்கள் கூட வந்திருப்பதாகவும், தொலைக்காட்சி நிலையம் தனக்கு மிகவும் சார்பாக உள்ளதால் தன்னால் இதுபோன்ற விழிப்புணர்வைக் கொண்டு வரும் நிகழ்வுகளை மக்களுக்கு வழங்கக் கூடியதாக உள்ளதாகவும் கூறினார். இந்தியாவில் இருந்து கொண்டு மக்களை முற்போக்குச் சிந்தனைக்குக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மத்தியில் இன்றும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு மக்களை ஆட்டு மந்தைகளாக எண்ணி இந்தியத் தமிழ் சினிமா ஒன்றை மட்டும் தளமாகக் கொண்டு ரொரொன்டோவில் ஒரு பிற்போக்குத் தமிழ் தொலைக்காட்சி நிலையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கனேடியத் தமிழ் மக்களின் சாபக்கேடு என்பதைத் தவிர வேறுஒன்றும் சொல்வதற்கில்லை.
இனி இது தொடர்பாகப் பார்வையாளர்களிடமிருந்து கேள்விகளை எதிர்பார்க்கின்றேன்.

(ஓஸ்லோவில் இடம்பெற்ற 35வது இலக்கியச் சந்திப்பில் படிக்கப்பட்ட கட்டுரை)

Wednesday, March 31, 2010

"சினேகிதன்”கள் மற்றும் நான். கறுப்பி

இனிமையான குளிர்கால காலை நேரம். காலை உணவிற்காக நாங்கள் ரொறொன்டோவின் மத்தியில் உணவகம் ஒன்றில் சந்தித்துக்கொண்டோம். “சினேகிதன்”கள் மற்றும் நான். கறுப்பி

சினேகிதன் அமைப்பு பற்றிக் கொஞ்சம் கூறுங்கள்? எப்போது ஆரம்பிக்கப்பட்டது அதன் நோக்கம்?

விஜெய் - அமைப்பைப் பற்றிக் கூறு முன்பு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். Gay
(ஓரினப்பாலினர்) என்றவுடன் தமிழ்ச் சமூகம் தமிழச் சமூகம் என்றில்லை அனேக சமூகங்களின் பார்வை உடலுறவு என்ற ஒன்றை மட்டும் சார்ந்ததாகவே இருக்கின்றது. இது எனக்கு மிகவும் சினத்தையும் விசனத்தையும் தருகின்றது. எங்களுக்குள்ளும் ஆண் பெண் காதலர்களிடம் இருக்கும் அத்தனை உணர்வுகளும் இருக்கின்றன, அத்தோடு அவர்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளும் எங்கள் காதலுக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றன, இதனை எமது சமூகம் புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம் என்பது எனது முதல் கருத்து.

டான்ஸ்ரன் - சினேகிதன் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு “தோஸ்தி;” என்ற வடஆசிய ஓரினப்பாலினர் அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு என்னைப் போன்ற பல தமிழ் இளைஞர்களும் சென்று கொண்டிருந்தோம். என்ன பிரச்சனை என்றால் அங்கு வருபவர்களில் அனேகர் ஹிந்திக்காறர்களாய் இருப்பதால் அவர்கள் ஹிந்தியில் ஹிந்திப்படங்கள் பற்றிய உரையாடிக்கொண்டிருப்பார்கள். தமிழ் இளைஞர்கள் நாங்கள் ஒரு மூலையில் ஒதுங்கி ஒதுக்கப்பட்டு விடுவோம். அப்பவே எனக்குள் தமிழ் ஆண் ஓரினப்பாலினர்களுக்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அந்த நேரம் நான் “தோஸ்தி”யில் அங்கத்திவராய் இருந்தேன்.

என்ன பெயர் தோஸ்த்தா?

டான்ஸ்ரன் - “தோஸ்தி” தோஸ்தி என்றால் நண்பன் என்று பொருள். ஒரு அமைப்பை இயக்க வேண்டும் என்றால் பல பிரச்சனைகள் இருக்கின்றன. முக்கியமாக பொருளாதாரப் பிரச்சனை. அவற்றை ஒழுங்கு செய்து கொண்டு இந்த சினேகிதன் என்ற அமைப்பை ஆரம்பித்தேன். விஜெய்தான் எனது முதலாவது உதவியாளரும் உறுப்பினரும்.

எப்படி நீங்கள் அங்கத்தவர்ளை சேர்த்துக்கொள்கின்றீர்கள். இப்படி ஒரு அமைப்பு இருக்கின்றது, என்று எப்படிப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றீர்கள்?

டான்ஸ்ரன் - எனக்கு ஏற்கெனவே தோஸ்திக்கு வந்துகொண்டிருந்த பல தமிழ் ஆண் ஓரினப்பாலினர்களைத் தெரியும், அத்தோட நான் கனகாலம் ரொறொன்டோ நகரில் வாழ்ந்து கொண்டிருந்தாலதும் பலரைத் தெரிந்திருந்தது. அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து இந்த அமைப்பைப் பற்றிக் கூறி வரவழைத்தேன். அவர்கள் தங்களுத் தெரிந்தவர்களுக்குக் கூறி, அப்படியே வாய் வார்த்தையால் மட்டும் தெரியப்படுத்தியதுதான். முதலாவது சந்திப்பிலேயே பல புதுமுகங்கள் வந்து கலந்து கொண்டார்கள். எங்களுக்கு மின்தளம் இருக்கிறது, அதிலும் இந்த அமைப்பு பற்றித் தெரியப்படுத்தியிருந்தோம். அது மூலமாகத் தெரிந்து கொண்டு வந்தவர்களும் இருக்கின்றார்கள்.

உங்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொலைபேசியில் அழைத்தவர்களோ, இல்லாவிட்டால் நீங்கள் நடாத்தும் கூட்டங்களுக்கு வந்து கலகம் செய்தவர்களோ இருக்கின்றார்களா?

டான்ஸ்ரன் - அப்படிப் பெரிதாக நடந்ததாக நினைவில்லை. நாங்கள் பல தமிழ் அமைப்புகளுக்குச் சென்று உரைகள் நிகழ்த்தியிருக்கின்றோம். அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இருக்கின்றார்கள். கடுமையாகப் பேசியவர்களும், துப்பி விட்டுச் சென்றவர்களும் இருக்கின்றார்கள். 93இல் நாங்கள் ASAAP இற்காக

ASAAP என்றால்?

டான்ஸ்ரன் - ASAAP என்றால் Alliance for South Asian AIDS Prevention- HIV. AIDS விழிப்புணர்விர்க்காக ஆரம்பிக்கப்பட்ட சேவை. இது முக்கியமாக ஒரு தமிழ் நண்பருக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் அதற்காக தமிழில் துண்டுப் பிரசுரங்கள் அடித்து தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்று கொடுத்துக்கொண்டிருக்தோம். அங்கு வந்த ஒரு வடஆசிய அமைப்பின் தமிழ் அங்கத்தவர், அவர் ஒரு முற்போக்காளரும் கூட எங்கிடம் “என்ன நீங்கள் தமிழ் ஆக்களுக்கு எட்ஸ் இருக்கிறமாதிரிப் பொது இடங்களில சொல்லுறீங்கள்” என்று கோபப்பட்டுக்கொண்டார். இது கனகாலத்திற்கு முன்பு நடந்தது ஆனால் அவரே இப்போது எங்களை தமது அமைப்பிற்கு அழைத்து தமிழ் மக்களுக்கு எட்ஸ் எச்ஐவி பற்றிய விளக்க உரையெல்லாம் நிகழ்த்துமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றார். இது ஒரு முக்கியமாற்றம்.

தமிழ் மக்களென்றால் தமிழ் இளைஞர்கள் யுவதிகளை மட்டும் குறிப்பிடுகின்றீர்களா?

டான்ஸ்ரன் - பல தரப்பட்ட வயதுக்காரருக்கும் நாங்கள் உரைகள் நடாத்திக்கொண்டிருக்கின்றோம். பல பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கும் சென்று உரை நிகழ்த்தியிருக்கின்றோம்.

சினேகிதன் அமைப்பு தமிழ் ஆண்களுக்காக மட்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதா?

டான்ஸ்ரன் - தமிழ் ஆண்களக்காக என்று தான் ஆரம்பித்தோம். ஆனால் இந்த அமைப்பு வடஆசிய ஆண்களுக்கா ஒரு வெளிதான். எங்கள் அமைப்பில் சிங்கள, கன்னட, தெலுங்கு, மலேசிய தமிழ் ஆண்களும் இணைந்திருக்கின்றார்கள். எங்களால் தென்இந்தியர்;களுடன் பெரிதாக இணைய முடியவில்லை. அவர்களின் தொகை அதிகம், எனவே வடஆசியர்களில் மற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் எங்களுக்கான ஒரு அமைப்பாக “சினேகிதன்” இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இவர்கள் எல்லோரும் அங்கத்தவர்களா? உங்கள் அமைப்பில் இணைவதென்றால் என்ன செய்ய வேண்டும். எப்படித் தொடர்பு கொள்வது?

விஜெய் - அங்கத்தவர்கள் என்று இல்லை, ஆனால் சினேகிதன் அமைப்பின் கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் வர விரும்பினால் எங்களுடன் மின்அஞ்கல் மூலம் தொடர்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.. எங்களிடம் ஒரு ஒப்பந்தப் பத்திரம் இருக்கின்றது அதை நிரப்பி கையப்பம் இட வேண்டும். தனி ஒருவரின் தகவல்கள் நம்பிக்கையோடு பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. பலர் தமது வாழ்க்கை முறையை இன்னும் வெளிச்சத்திற்கு கொண்டு வராததால் அவர்கள் தகவல்களை இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது சினேகிதன் அமைப்பின் கடமையாகும். நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல்களையும் இந்த சந்திப்போடு பிரசுரிக்க முடியும்.

எப்போது சந்தித்துக் கொள்ளுவீர்கள்?

டான்ஸ்ரன் - மாதம் ஒரு முறை சந்தித்துக் கொள்ளுவோம். கோடை விடுமுறையில் பிக்னிக் செல்வதுண்டு. அதை விட இடையிடையே சந்தித்துக்கொள்வதுமுண்டு.

சிவா – விஜெய் எங்கள் அமைப்பில் தொடக்க காலத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லு, மிக சுவாரஸ்ரயமாக இருக்கும்.

விஜெய் - 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான் இவர்களைச் சந்தித்தேன். எனக்கு அப்போது 21 வயது. எனது பிரச்சனை என்னவென்றால் எனக்கு அப்போது தமிழ் ஓரினப்;பாலினர் ஒருவரையும் தெரியாது நான் மின்தளங்களுக்குச் சென்று தமிழ் ஆண்கள் யாராவது
ஓரினப்;பாலினர்களாக இருக்கின்றார்களா என்று தேடிக்கொண்டிருந்தேன். ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை. நான் முதல் முதலாகச் சந்தித்தது இவனைத் தான். (சிவாவைக் காட்டுகின்றார்). நான் எனது நிலமையை சிவாவிற்கு எடுத்துச் சொன்னேன். அதற்கு சிவா தான் தமிழ் ஆண் ஓரினப்;பாலினர்களுக்காக ஏதாவது செய்யலாம் என்றிருக்கின்றேன், ஆனால் தனி ஒருவராக என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றது என்றார். நான் அப்போது எனது உயர்கல்வியை முடித்திருந்திருந்தேன். எனக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. சிவாவிற்குப் பல ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களைத் தெரிந்திருந்தது. அவர்களையும் இணைந்து ஒரு சிறிய அமைப்பாக ஆரம்பிக்கலாம் என்ற ஆர்வம் இருவருக்குள்ளும் இருந்தது, ஆனால் இது சாத்தியமா என்ற சந்தேகமும் எங்களுக்குள் இருந்தது. விடை தெரியாப் பல கேள்விகள் எனது வாழ்க்கை முறை பற்றி எனக்குள்ளேயே அடங்கிப் போயிருந்தது அதற்கான விடை இங்கே கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளிருந்தது. நாங்கள் ஒரு நாளைத் தெரிவு செய்து, நான் நினைக்கின்றேன் ஜுலை மாதம் ஒரு சனிக்கிழமையென்று. நாங்கள் எங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்த அவர்கள் தமது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். சில மின்தளங்களிலும் விபரத்தை அறிவித்திருந்தோம். பேரிதாக அறிவித்தல் என்றில்லாமல் உள்ளுக்குள்ளாகவே தெரியப்படுத்தினோம். ஒரு நாலு பேர் வருவார்கள் என்று நம்பி வடையும் சம்பலும் எடுத்துக்கொண்டு போனாம். நம்பமாட்டீர்கள், பெரிதாக அறிவித்தல் ஏதுமில்லாமல் ஆரம்பித்த முதல் கூட்டத்திற்கு பன்னிரண்டு பேர் வந்திருந்தார்கள். அது எங்களுக்கு மிகவும் உச்சாகத்தைக் கொடுத்தது. வெளியே பல தமிழ் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் சந்தித்துக் கொள்வதற்கு ஓர் இடம் தேவைப்படுகின்றது என்பது தெளிவானது. பல வயதினர் வந்திருந்தார்கள். எங்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் நாங்கள் எல்லோரும் ரொறொன்டோவில் வாழும் தமிழ் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதே. எங்களுக்குச் சந்தித்துக்கொள்ள ஓர் இடம் தேவை, எமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஓர் இடம் தேவை, என்பதோடு வேறு எதுவெல்லாம் விடுபடுகின்றது என்பதை ஆராய்ந்தோம். நாங்கள் எங்கள் தமிழ் கலாச்சார நிகழ்வுகளுக்கு தமிழ் ஆண் ஓரினப்;பாலினர்கள் என்ற அடையாளத்துடன் செல்ல முடியாது. எங்களுக்கான ஓர் இடம் தேவை என்று தெரிந்து கொண்டோம். நாங்கள் ஆறுமாதத்திற்கு ஒருமுறை, அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம், ஆனால் வந்தவர்கள் மாதம் ஒருமுறை சந்தித்துக் கொள்ளாலாம் என்பதோடு எம் போன்றவர்களுக்காக எதையாவது செய்யலாம், ஒன்றாக இணைந்து குழுவாக எங்காவது செல்லலாம் என்று கேட்டுக்கொண்டார்கள். அப்படித்தான் இந்த அமைப்பு ஆரம்பித்து வளர்ந்து கொண்டது. சினேகிதன் அமைப்பு அங்கு வருபவர்களின் வாழ்க்கை முறையை இரகசியமாகப் பாதுகாப்பதோடு, அவர்களுக்கு உதவுவதற்கான ஒரு தளமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. பல ஆண் ஓரினப்;பாலினர்கள் தமது வாழ்க்கை முறையை இன்னமும் தமது நண்பர்களுக்கோ, அல்லது குடும்ப அங்கத்தவர்களுக்கோ வெளிப்டுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது என்பது மிகவும் முக்கியம்

டான்ஸ்ரன் - உதவி அமைப்பு ஒன்று ஆரம்பிப்பதற்கு முன்பு நான் பல வேற்று இன ஆண் ஓரினப்பாலினர்களைச் சந்தித்து இருக்கின்றேன். இருந்தும் தமிழில் ஒருவரையும் சந்திக்கவில்லை என்பது எனக்குள் ஒரு ஏக்கத்தைத் தந்து கொண்டிருந்தது. முதல் முதலில் ஒரு தமிழ் ஆண் ஓரினப்பாலினரைச் சந்தித்த போது அப்பாடா என்று மனம் திறந்து நான் எதிர்கொண்ட பிரச்சனைகளை கலந்துரையாட முடிந்தது. எனக்கு பல நண்பர்கள் இருக்கின்றார்கள், அவர்களும் எனக்கு மிகவும் உதவியாகத்தான் இருக்கின்றார்கள், இருந்தும் ஒரு தமிழ் ஆண் ஓரினப்பாலினரின் நட்பு என்பது ஒருவிதத்தில் எதையோ கடந்து ஒரு மனஅமைதியைத் தரும் ஒன்றாகத்தான் என்னால் உணர முடிந்தது, அந்த உணர்வுதான் என்னைப் போன்ற மற்றை இளைஞர்களுக்கும் இப்படியான உதவி கிடைக்க வேண்டும், அதற்குக் காரணமாக நான் ஏன் இருக்கக் கூடாது என்ற உந்துதலை எனக்குள் உருவாக்கி விட்டது. எங்களைப் புரிந்துகொண்டவர்களின் நட்பும், உதவியும் கிடைக்காவிட்டால் நிச்சயம் இவர்கள் தொலைந்து போய் விடுவார்கள். மனஉளைச்சலுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவிருக்கும்.

நீஙகள் எல்லோரும் படித்த நன்கு ஆங்கிலம் கதைக்கக் கூடிய மின்தளங்கள் பாவிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றீர்கள் உங்களுக்கு ஓர்பாலினச் சேர்க்கை பற்றிய தெளிவு அதிகம் இருக்கும், ஓரினப்பாலினர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும், இப்படி இல்லாத தமிழ் இளைஞர்கள் எப்படி உங்களுடன் இணைந்து கொள்ள முடியும், அதற்காக ஏதாவது முயற்சி எடுத்திருக்கின்றீர்களா?

டான்ஸ்ரன் - அப்படியான பலர் இணைந்திருக்கின்றார்கள். நாங்கள் ஆரம்பத்தில் பார்த்ரஸ் பகுதிகளின் பல கூட்டங்களை நடாத்தியிருக்கின்றோம், அப்போது கேள்விப்பட்டு வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அனேகமாக இப்படியானவர்களுக்குத் தேடல்கள் அதிகம் இருக்கும், ஆங்கிலம் தெரியவேண்டிய அவசியம் இல்லை, ஏதோ வழிகளில் தேடல்கள் மூலம் தம் போன்றவர்களை இனங்கண்டு கொள்வார்கள்.

எந்த வயதினர் அதிகம் உள்ளார்கள்?
டான்ஸ்ரன் - எல்லா வயதினர்களும் உள்ளார்கள். இருபது வயதிலிருந்து அறுபது வயது வரையான தமிழ் ஆண்கள் எமது கூட்டங்களுக்கு வருவதுண்டு.

இந்த வயதானவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கின்றது. இவர்கள் திருமணமானவர்களா?

டான்ஸ்ரன் - பல விதமாக உள்ளார்கள். பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் விவாகரத்து செய்தவர்கள் உள்ளார்கள், திருமணமாகாதவர்கள் உள்ளார்கள். அத்தோடு சில வயதான ஆண்கள் தமது ஆண் துணையோடு சந்தோஷமாக உள்ளார்கள். இவர்கள் பெரிதாகக் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதுமட்டுமல்ல கூட்டங்களுக்கு வந்து போன சில ஆண்கள், பின்னர் குடும்ப நெருக்கடியால் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதும் நடந்திருக்கின்றது.

ஆண் துணையோடு இருக்கும் வயதான இந்த ஆண்கள் சமூகத்திற்குத் தம்மை அடையாளம் காட்டியவர்களாக உள்ளார்களா? இல்லைவிட்டால் மறைவில் உள்ளார்களா?

டான்ஸ்ரன் - இதுவும் எல்லா மாதிரியும்தான் இருக்கிறது. சிலர் வெளியில் வந்துவிட்டார்கள், சிலர் இன்னமும் மறைவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவரவர் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்துத்தான் எல்லாமுமே.

தம்மை ஓரினப்பாலினர்கள் என்று அடையாளம் காட்டாத ஆண்களுக்கு, அவர்கள் குடும்ப அங்கத்தவர்களால் திருமணம் செய்யக் கேட்டு நெருக்கம் கொடுப்பது அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன், இந்த நிலையை அவர்கள் எப்படிச் சமாளிக்கின்றார்கள்.

விஜெய் - தம்மை அடையாளம் காட்டாதவர்களுக்கு மட்டுமல்ல, காட்டியவர்களுக்கும் இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்கின்றது. காட்டியவர்களுக்குத்தான இன்னமும் கடுமையாக உள்ளது என்பது எனது கருத்து. நான் எனது குடும்பத்திற்குச் சொல்லிவிட்டேன். அவர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். அவர்களின் கருத்துப் படி கனடா வந்ததால்தான் நான் இப்படி மாறிப் போய்விட்டேன் என்றும் அதோடு சும்மா ஒரு வித்தியாசமாக உணரவேண்டும் என்பதற்காக, ஒரு நாகரீக மோக முகம் காட்டிக்கொண்டிருக்கின்றேன் என்று தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். முப்பது வயது வரும்போது நானாகவே அதை உணர்ந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வேன் என்றும் நம்புகின்றார்கள்.

உங்களுக்கு இப்போது எத்தனை வயது?
விஜெய் - இருபத்தைந்து.

எப்போது நீங்கள் உங்களை ஒரு ஓரினப்பாலினர் என்று உணர்ந்தீர்கள்?

விஜெய் - நான் வந்து ஐந்து வயதாக இருக்கும் போதே, நான் மற்றவர்களில் இருந்து வித்தியாசப்படுவதாக உணரத்தொடங்கிவிட்டேன்.

ஐந்து வயதென்றால் நம்பமுடியாமல் இருக்கின்றது,. வித்தியாசம் என்றால் அதை எப்படி உணர்ந்தீர்கள் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்?

விஜெய் - அங்குமில்லாமல் இங்குமில்லாமல் என்று சொல்வார்களே, ஆண்களோடும் சேர்ந்து விளையாட முடியாமல் பெண்களோடும் சேர்ந்து விளையாட முடியாமல் ஒருவித தனிமையை உணரத் தொடங்கினேன்.

டான்ஸ்ரன் - நானும் சின்ன வயதிலேயே நான் மற்றவர்களிலிருந்து வேறு படுவதாக உணரத் தொடங்கிவிட்டேன். எனது அண்ணாவின் நண்பர்கள் என்னை விளையாடச் சேர்க்க மாட்டார்கள். தள்ளி விட்டு விடுவார்கள். சின்னவயதில் உணரத் தொடங்கிவிட்டோம் என்பது பாலியல் சம்மந்தமாக இல்லை, ஆனால் மற்றைய ஆண்களிலிருந்து வேறுபடுவதாக நிச்சயமாக உணரத்தொடங்கிவிட்டோம்.

சிவா - எனக்குச் சின்ன வயதில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட முடியாமல் இருந்தது. பெண்களோடு சேர்ந்து விளையாடவும் முடியாது, ஆண்கள் கேலி செய்வார்கள், இது பெரிய தடுமாற்றமா இருந்தது.

டான்ஸ்ரன் - நீங்கள் சியாம் செல்லதுரையின் “Funny Boy ” வாசித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அவர் எழுதிய அத்ததையும் எனது வாழ்விலும் இருந்தன. அவர் குறிப்பிட்டிருந்தது எல்லாம் உங்களுக்கு நினைவிருக்குமென்று நம்புகின்றேன், அப்படியே அவருடைய வாழ்க்கையை என்னுடையதோடு நீங்கள் பொருத்திப் பாரக்க முடியும்.

நீங்கள் உங்களை மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக உணரும் போது எப்படியிருந்தது. கவலையாக, குழப்பமாக இல்லாவிட்டால் பயமாக?

விஜெய் - எனக்குக் கவலையாகத்தான் இருந்தது. ஏனென்றால் இது பாலியல் சார்ந்ததல்ல, ஆனால் ஆண்கள் எங்களைப் புறக்கணிப்பது, முக்கியமாக என் வயதுச் சிறுவர்கள் விளையாடும் எந்த விளையாட்டிலும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. நான் அதிகம் பெண்களோடுதான் விளையாடுவேன், எனக்குப் பெண் நண்பிகள்தான் அதிகம் இருந்தார்கள், இதனால் பாடசாலைகளில் ஆண்கள் என்னை ஒதுக்கத் தொடங்கிட்டார்கள் அது எனக்குக் குழப்பமாகவும் கவலையாகவும் இருந்தது.

சிவா - நான் அதிகமாக எனது சகோதரியின் நண்பிகளுடன் விளையாடுவதுதான் வழக்கம். இது மற்றவர்களுக்கு நான் வித்தியாசமாக இருப்பதாக உணரச்செய்யும், அதனால் அவர்கள் என்னை வித்தியாசமாக நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

உங்கள் பெற்றோர்களுக்கு உங்கள் நிலை தெரியுமா?
சிவா - இப்போது தெரியும்.

அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா?
சிவா - தெரியாது நான் அவர்களோடு கதைப்பதில்லை.

கதைப்பதில்லை என்றால் இந்தப் பிரச்சனையால்தானா? அப்படியென்றால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்?
சிவா - ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்வதிலும் பார்க்க அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

அவர்களுக்கு விளங்கிக் கொள்வது கடிமாக இருக்கும் என்பது உங்களுக்குப் புரிகின்றதா?

சிவா - ஓம், எனது அப்பாவுக்குத்தான் முதலில் தெரியவந்தது. எப்படியென்று எனக்குத் தெரியாது, அவர் அம்மாவுக்குச் சொல்ல அம்மா என்னிடம் கேட்டார். நான் ஒத்துக் கொண்ட போது அது சண்டையாக மாறியது. அதன் பிறகு நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் அவர்களோடு கதைப்பதில்லை.

உங்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்களா?

சிவா - எனக்கு இப்போது இருபத்தி ஐந்து வயது. எனக்கு இருபத்தொரு வயதாக இருக்கும் போதே அவர்கள் வற்புறுத்தத் தொடங்கிவிட்டார்கள். நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லி விட்டேன், முன்பு ஒன்று இரண்டு மணித்தியாலங்கள் வீட்டிற்குச் சென்று வருவதுண்டு. எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருக்கின்றார்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மூத்த சகோதரியுடன் எனக்கு நெருங்கிய உறவு இல்லை. எனது இரண்டாவது சகோதரிக்கு நான் பதினாறு வயதாக இருக்கும் போது சொல்லி விட்டேன். அவருக்கும் எனக்கும் நெருங்கிய உறவு இருக்கின்றது இருந்தாலும் இதுபற்றிக் கதைப்பதை அவர் எப்போதுமே தவிர்த்துத்தான் வந்துகொண்டிருக்கின்றார்.

டான்ஸ்ரன் - பொதுவாகவே தமிழ் மக்கள் பாலியல் சம்மந்தமாக எதையும் கதைப்பதில்லை. தாம் காதலிப்பதைக் கூடக் கதைப்பதற்கு அஞ்சுபவர்களாகவே இருக்கின்றார்கள். இப்படியாகத் தவர்க்கும் மனப்பான்மை கொண்டவர்கள்தான் இவர்கள். நான் ஒரு ஓரினப்;பாலினர் என்பது எனது குடும்பத்தில் எல்லோருக்குமே தெரியும், நான் எந்த ஒரு குடும்ப நிகழ்விற்குச் சென்றாலும் ஒருத்தரும் என்னை ஒன்றும் கேட்பதில்லை. எல்லாத்தையும் மூடியே வைத்திருப்பார்கள்.

சும்மா எதையாவது கேட்டு உங்கள் மனதை நோகச் செய்வதிலும் பார்க்க இது பரவாயில்லை என்றே நினைக்கின்றேன்.

டான்ஸ்ரன் - அப்பிடி என்றில்லை, ஒரு குடும்ப நிகழ்விற்குச் செல்லும் போது எனது சகோதர்கள் மனைவி குழந்தைகளுடன் வந்தால் அவர்களை நன்றாக வரவேற்றுக் கதைத்துச் சந்தோஷமாக இருப்பார்கள், எனது வாழ்க்கை பற்றி ஒருநாளும் ஒருத்தரும் ஒன்றுமே கேட்பதில்லை. காரணம் எனது வாழ்க்கை முறையை அவர்கள் வாழ்க்கையாகப் பார்க்கவில்லை.

சிவா - அவர்களுடைய பார்வையில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதைத்தான் வாழ்க்கையாகப் பார்க்கின்றார்கள். நாங்களும் ஒருநாளைக்கு மனம் மாறி ஒரு பெண்ணைத் திருமணம் செய்வோம் என்று நம்புவதால் எமது வாழ்கையைப் பற்றிக் கதைப்பதைக் கூடத் தவிர்க்கின்றார்கள்.

சினேகிதன் அமைப்பிற்கு பிரச்சனையோடு அதாவது குழம்பிய மனநிலை என்று வைத்துக்கொள்வோமே, வந்து தமது குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டு போனவர்கள் உள்ளார்களா?

டான்ஸ்ரன் - நிறம்பப் பேர் உள்ளார்கள். சினேகிதன் அமைப்பின் நோக்கமே அதுதான். நீங்கள் தனியாக இல்லை உங்களைப் போன்றவர்கள் பலர் எமது சமூகத்தில் உள்ளார்கள், அவர்களுடன் உரையாடுவதன் மூலம் உங்களுக்குள் உள்ளடக்கி வைத்திருக்கும் கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் தெளிவடைவீர்கள் என்பதைத்தான் நாம் முக்கியமாக அவர்களுக்கு உணர்த்துகின்றோம். தமக்கான ஒரு துணையை இங்கே கண்டுகொண்டு சந்தோஷமாக விலகியவர்களும் உள்ளார்கள். இதுதான் எமக்குத் தேவை. இன்று உங்களோடு நாம் மனம் திறந்து கதைப்பதற்கான காரணமும் இதுதான். இந்த உரையாடலை வாசிக்கும் ஒன்றிரண்டு இளைஞர்களாவது தமக்கு உதவி செய்யக் கூடிய அமைப்பு ஒன்று ரொறொன்டோவில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று அடையாளம் கண்டு எங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கான உதவிகளையும் ஆறுதலையும் நாங்கள் வழங்க வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம்.


தங்களது குடும்பத்தின் தூண்டுததால் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர்கள் உள்ளார்களா?

சிவா - பலர் இருக்கின்றார்கள்

அதுதான் மாறவேண்டும் என்பது எனது கருத்து, என்னைப் பொறுத்தவரை சமூகம் மாறும், எமது குடும்பம் மாறும் அதன் பின்னர் நாங்கள் வெளிப்படையாக ஒரு துணையுடன் வாழலாம் என்று நினைத்தால் நீங்கள் ஒருபோதும் வாழ முடியாது, அதே நேரம் உங்கள் குடும்பம் சமூகம் என்று பார்த்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதென்பது நீங்கள் உங்களுக்கும் அந்தப் பெண்ணிற்கும் செய்யும் துரோகம் அல்லவா?

டான்ஸரன் - சமூகம் மாறேலை என்று சொல்ல முடியாது. இப்படி ஒரு தமிழ் பத்திரிகைக்காக எங்களைப் பேட்டி நீங்கள் எடுக்கின்றீர்களே இதுவே எமது சமூகத்தின் ஒரு பெரிய மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் நினைக்கிறன் 2006ஆம் ஆண்டு முதல் முதலாக தமிழ் ஆண் ஓரினப்;பாலினர் ஒருவருக்குப் பெரிதாகத் திருமணம் நடந்ததென்று, இதெல்லாம் பெரிய மாற்றம். சிறிது சிறிதாகத்தானே எந்த மாற்றமும் இடம்பெறும். முன்பு 90களில் தமிழ் பத்திரிகைகளில் எங்கள் அமைப்புப் பற்றி நாங்கள் எழுத முயன்று தோல்வியடைந்தோம். பணம் கொடுத்ததால் விளம்பரம் மட்டும் போடவிட்டார்கள். பல கடைகள் தங்கள் கடைகளில் எமது துண்டுப் பிரசுரங்களைப் போடக்கூட அனுமதிக்கவில்லை.


விஜெய் - நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, ஆனால் செயல்படுத்துவதுதான் சிரமம். எனக்கு இப்பவும் நினைவிருக்கு, நான் அப்ப மூன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தனான். என்னுடைய அப்பா என்னைத் தனியாக அழைத்து உனக்குப் பெண்களைப் பிடிக்குமா என்று கேட்டார். எனக்குப் பெரிதாக அவர் என்ன கேட்கின்றார் என்பது விளங்கவில்லை ஓம் பிடிக்கும் என்று சொன்னேன். அதில்லை உனக்கு கேர்ள் பிரண்டாகப் பெண் இருப்பது பிடிக்குமா என்று கேட்டார். அப்போது கூட அந்த வயதில் எனக்கு அவர் எதைக் கேட்கின்றார் என்ற தெளிவு வரவில்லை, இருந்தாலும் ஓம் நல்லாப் பிடிக்கும் என்று சொன்னேன் அதற்கு அவர் உனக்குப் பெண்ணைப் பிடிக்குமென்றால் ஒரு பெண் போல நடப்பதை நீ நிப்பாட்டிக் கொள் என்று சொன்னார். எங்கட சமூகத்திற்கோ அல்லது குடும்பத்திற்கோ ஓர் பாலினச் சேர்க்கையாளர்கள் என்றால் என்ன என்று தெரியாது என்பது பொய். அவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கின்றது, ஆனால் ஒருவரும் அது பற்றிக் கதைப்பதில்லைத் தெரிந்து கொள்வதைக் கூட வெட்கப்படும் விடையமாகத் தான் பார்க்கின்றார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தால் சமூகத்தால் ஓர் ஓரினப்;பாலினர் என்று அடையாளம் காணப்பட்டால் உங்களை எப்படி மாற்றலாம் என்பதில்தான் அவர்கள் கவனம் இருக்கின்றது. உங்களில் எதுவோ ஒரு பிழை இருப்பதைப் போலதான் அவர்கள் பார்க்கின்றார்கள், இந்த வேளையில்தான் சினேகிதன் போன்ற அமைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமாகப் படுகின்றது. எங்களைப் போன்றவர்களுடன் மனம்விட்டுக் கதைத்து சந்தோஷமாகச் சிரித்துப் பழகுவதென்பதுதான் எங்களை ஓர் சுதந்திர மனிதனாக முடிவுகளை எடுக்க வைக்கும் இல்லாவிட்டால் எப்படி எங்களாளல் எமது குடும்பத்தை சமூகத்தைத் துணிவாக எதிர்கொள்ள முடியும் சொல்லுங்கள்.

சிவா - நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக எமது சமூத்தை மாற்ற முடியும் என்பது எனது கருத்து. அதற்கு நாங்கள் தொடர்ந்து கடுமையாக வேலை செய்ய வேண்டும். செய்து கொண்டிருக்கின்றோம்.

டான்ஸ்ரன் - ஓர் ஆண், தான் ஓரினப்;பாலினர் என்று ஒத்துக்கொண்டு விட்டு தனது சமூகத்தையும், குடும்பத்தையும் எதிர்த்துக் கொண்டு வெளியேறிவடுவதென்பது இலகுவான காரியமல்ல. எனக்குத் தெரிந்த ஒருவருக்கு அவர் வீட்டிற்கு ஒரே மகன். அவர்தான் அந்த குடும்பத்தின் சந்ததியைப் பெருக்க வேண்டும், குடும்பப் பெயரைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள், இப்பிடிப் பல அழுத்தங்களுக்கு மத்தியில் எல்லோரையும் விட்டு இலகுவது என்பது இலகுவான காரியமல்ல. எங்களுக்கு எமது வாழ்க்கையிலும் சந்தோஷம் வேண்டும், அதே நேரம் எமது குடும்பம், சமூகமும் எமக்கு வேண்டும்.

எமது மக்களுக்கு சமூகத்திற்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

டான்ஸ்ரன் - ஒரு தமிழ் கலியாணப் புரோக்கரை எங்களுக்காகவும் வைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். (சிரிக்கின்றார்கள்) நான் பகிடிக்குக் கூறவில்லை. எமது இளைஞர்களுக்குப் பேசித் திருமணம் செய்வதே பழகிப் போய் விட்டது. தான் ஒரு ஓரினப்;பாலினர் என்று தெரிந்து கொண்டவனுக்குக் கூடத் தனக்கான ஒரு துணையைத் தேடும் திறமை இல்லாமல் இருக்கின்றது. இதனால் பல தவறான உறவுகளில் ஈடுபட்டு தம் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்கின்றார்கள்.

விஜெய் - இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பு மீண்டும் எமது சமூக மாற்றம் பற்றிக் கூறலாம் என்று நம்புகின்றேன். எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளார்கள். எனக்கு 16வயது இருக்கும் போதே நான் அவர்களுக்கு என் நிலையைக் கூறி விட்டேன். அவர்கள் இதைப் பெரிதாக எடுக்கவில்லை. மாறாக எனது தங்கை எனக்கு மிகவும் உறுதுணையாக உள்ளார். விழிப்புணர்வுக் கூட்டங்களின் அவள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றாள், அதேவேளை இளம்வயதினர் பலர் இந்த விடையத்தில் மிகவும் தெளிவாக உள்ளார்கள் என்பதுதான் என் எண்ணம். என் வயதினரிலும் விட, எனக்குப் பத்து வயது குறைந்தவர்களின் புரிந்துணர்வு மிகவும் அதிகமாக உள்ளது. இது எமது சமூகத்தின் பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதைத்தான் உணர்த்துகின்றது. அடுத்த சந்ததியினருக்கு நாம் எதிர்கொண்ட அளவிற்குப் பிரச்சனை இருக்காது. மேலும் சமூகத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் என்ன, நாங்கள் வித்தியாசமானவர்கள், எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எங்களை மதிக்க அவர்கள் பழக்கிக்கொள்ள வேண்டும்.


நீங்கள் அடிக்கடி வித்தியாசமானவர்கள் என்ற பதத்தை உபயோகிக்கின்றீர்கள் அது உகந்ததா?

டான்ஸ்ரன் - வித்தியாசம் என்றால் பெரும்பான்மையிலிருந்து நாங்கள் வேறுபடத்தான் செய்கின்றோம். அது எந்தக் காரணமாகவும் இருக்கலாம். நீங்கள் ஒரு பெண்ணியவாதியாக இருக்கும் பட்சத்தில் நீங்களும் எமது வழமையான பெரும்பான்மைச் சமுதாயத்திலிருந்து வேறுபடுகின்றீர்கள். அதனால்தான் இந்தப் பதத்தை நாம் உபயோகிக்கின்றோம்.

விஜெய் - நாங்கள் எங்களை மற்றவர்களிலிருந்து வித்தியாசம் என்று உணர்கின்றோம். நாங்கள் அதைக் கூறலாம், ஆனால் மற்றவர்கள் அப்படிக் குறிப்பிடுவது தவறு.

தாம் ஓர் பாலினச்சேர்க்கையளார் என்று தெரிந்து கொண்டு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது. அவர்கள் தமது காதல் வாழ்க்கையைத் தமது மனைவிக்குத் தெரியாமல் தொடர்கின்றார்களா?

டான்ஸ்ரன் - இதிலும் பலவிதமானவர்கள் உள்ளார்கள். சிலர் தமது மனைவியுடன் சந்தோஷமாகக் குடும்பம் நடத்திக் கொண்டும் இருக்கின்றார்கள்.

அது எப்படிச் சாத்தியம்?

டான்ஸ்ரன் - இரு பால்சேர்க்கையாளர்கள் இருக்கின்றார்கள் தானே. திருமணத்திற்கு முன்பு ஆண்ணோடு உறவு வைத்திருந்தவர்கள், திருமணமான பின்னர் மனைவியுடன் மட்டும் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் தாம்பத்திய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று நம்புகின்றீர்களா?

டான்ஸ்ரன் - ஓம் மனைவிக்குத் துரோகம் செய்யக் கூடாது என்பதில் சிலர் தெளிவாக இருக்கின்றார்கள். ஆண் நண்பர்களைச் சந்தித்து ஒரு பியர் அடிப்பார்கள், சாப்பிடப் போவர்கள் ஆனால் உடல் ரீதியான உறவு என்பதைத் தன் மனைவியுடன் மட்டும் என்று வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்ப காதலிப்பது ஒருத்தியைக் கை பிடிப்பது ஒருத்தியை என்று இருக்கின்றதுதான் அதுபோலதான் இதுவும்.

ஆனால் இதில் உடல் உறவு சம்மந்தமான வேறுபாடுகள் உள்ளதே.

டான்ஸ்ரன் - அதுதான் அவர்கள் அப்படியென்றால் இருபாலினச் சேர்க்கையாளர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லாதவர்கள்தான் மனைவிக்குத் தெரியமால் தமது உறவைத் தொர்ந்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்பவர்களாக உள்ளார்கள். இது எயிட்ஸ் அளவிற்குப் பிரச்சனையைக் கொண்டுபோய் விடுவதுமுண்டு.

உங்களுக்குத் தமிழ் பெண் ஓரினப்பாலினர்கள் யாரையாவது தெரியுமா? நான் அவர்களுடன் உரையாட முடியுமா?டான்ஸ்ரன் - பலர் இருக்கின்றார்கள், ஆனால் வெளியில் வந்து உரையாடத் தயாராக இருக்கின்றார்களா என்பது தெரியாது. எமது சமூகத்தில் பெண்களுக்கான வெளியே இன்னும் கிடைக்கவில்லை, இந்த நிலையில் பெண் ஓர்பாலினர்களை தம்மை அடையாளப்படுத்தினால் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள் என்று நம்புகின்றேன்.

நீங்கள் ஏன் ஆண்களுக்கான அமைப்பாக மட்டும் இயங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் பெண்களையும் இணைத்து இயங்கலாமே? தமிழ் பெண் ஓர்பாலினர்களுக்கான அமைப்பு ரொறொன்டோவில் இருக்கின்றதா?

டான்ஸ்ரன் - சினேகிதன் அமைப்பு ஆண்களுக்கு மட்டுமானது. பெண்கள் விரும்பினால் அவர்களாக ஒன்றை அமைத்துக்கொள்ள முடியும். தற்போது பெண்களுக்கென்று அமைப்பு இருப்பதாக நம்பவில்லை.

சினேகிதன் அமைப்பு எயிட்ஸ் நோயளர்களிற்கு எந்த அளவிற்கு உதவி செய்கின்றது?.

டான்ஸ்ரன் - உதவி என்பதில்லை விழிப்புணர்வைக் கொண்டு வருவதுதான் எமது நோக்கம். உடலுறவு, அதற்கான பாதுகாப்புப் பற்றிய தெளிவு எமது சமூத்தில் மிகக் குறைவாக உள்ளது. கொண்டம் (ஊழனெழஅ) என்று ஒன்று உள்ளதே சிலருக்கு இன்னமும் தெரியாமல் உள்ளது. இந்தத் தெளிவுகளை அவர்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில்தான் சினேகிதனின் கவனம் உள்ளது. இதனால் தவறான பாதுகாப்பற்ற உறவுகளில் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புக்கள் என்பனவற்றிற்குச் சென்று விழிப்புணர்வு உரைகளை நடாத்தி வருகின்றோம். பல பெற்றோர் தமது குழந்தைகளுடன் இது பற்றிக் கதைப்பதைத் தவிர்த்தே வருகின்றார்கள். அவர்களுக்கு எச்ஐவி வைரஸ், எயிட்ஸ் பற்றிய தெளிவைக் கொண்டு வரவேண்டும் என்பது எமது அமைப்பின் நோக்கம். நாங்கள் ஒன்றும் பெரிதாக சமூகத் தொண்டு செய்கின்றோம் என்று கூறவில்லை. எம்மால் முடிந்ததை நாம் செய்கின்றோம். இன்னும் ஒளிந்து கொண்டிருக்கும் ஆண் ஓரினப்;பாலினர்கள் எங்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதுதான் சினேகிதன் அமைப்பின் விருப்பம்.

அப்படிச் சொல்ல முடியாது நீங்கள் மிகவும் நல்ல விடையங்கள் செய்கின்றீர்கள். உங்கள் சேவையைத் தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் “வைகறை” சார்ப்பில் எனது விருப்பமும் கூட.

நல்லது டான்ஸ்ரன், விஜெய், சிவா உங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாது வைகறைக்காக என்னோடு உங்கள் உணர்வுகள் கருத்துக்கள் போன்றவற்றை தெளிவாகவும், வெளிப்படையாகவும் பகிர்ந்து கொண்டதற்காக மிகவும் நன்றிகள். சினேகிதன் அமைப்பு எப்போதும் தனது சேவையை எமது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வாழ்த்திக்கொள்கின்றேன்.


நன்றி:வைகறை