Monday, December 26, 2011

தனிமை


அடர்ந்து படர்கிறது தனிமை 

பூதாகரமாய் வேர்விட்டு வளருமதை
அழிக்க வழியறியாது தவிக்கின்றேன்.

விருந்தினர் வருகின்றார்கள்
போகின்றார்கள்,
நானும் போயும் வந்துகொண்டுமிருக்கின்றேன்.

என்னுள் கொடியவிலங்கொன்று
எதனையும்  நெருங்கவிடாமல் தடுத்தபடியிருக்கின்றது.

எதையும் அனுபவிக்க முடியில்லை
இயந்திரங்கள் இயற்கையில் சுகந்தத்தை
எனக்காய்த் துப்பிக்கொண்டிருக்கின்றன.

காற்றைக் காற்றாடியினுாடும் சொந்தங்களை
தொலைபேசினுாடும் பெற்றுக்கொண்டிருக்கின்றேன்.

பாரமற்ற தனிமை என் கால்களைச் சுற்றிக்கொண்டு
என்னைத் தளர்வடையச் செய்கின்றது.

யாராவது சொல்லுங்களேன்
தனிமை எனக்கு மட்டுமே சொந்தமானதா?

Tuesday, December 6, 2011

யாழ்ப்பாணியத்தின் இன்னுமோர் அவலம்.


கனடாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் குடும்பங்களின் வாழ்க்கைத் தரமே தமது குழந்தைகளின் கல்வியில்தான் தங்கியிருக்கின்றது என்றொரு நிலைப்பாட்டில் பல தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகளை கட்டாயப்படுத்தி பல கலைகளைப் பயிற்றுவித்து மேடையேற்றுதல் போன்றவை ஏற்கனவே பலராலும் பேசப்பட்ட ஒன்று. இது ஒருபுறமிருக்க அடுத்து அதே யாழ்ப்பாணிய மனப்பான்மையோடு தமது குழந்தைகளை ஒரு மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அவர்களுக்கு எல்லாப்பாடத்திற்கும், பாடசாலையின் பின்னர் தனியாரிடம் அனுப்புகின்றார்கள். கனடாவில் பாடசாலைகளிலேயே after school Program இருக்கின்றது. அத்தோடு பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்பே பாடத்தில் சந்தேகமிருப்பின் ஆசிரியர்களிடம் சென்று தமது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வசதிகளையும் பாடசாலை செய்து கொடுத்திருக்கின்றது. இருந்தும் தமிழ் மக்கள் தமது குழந்தைகளை பிரத்தியேகக் கவனிப்பிற்காக தமிழ் ஆசிரியர்களிடம் பல பாடங்களுக்கும் பணம்கொடுத்து அனுப்புகின்றார்கள். தமது வேலையை விட்டு விட்டு Tuition Centre களை அமைத்து மிகவும் சிறப்பாக பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  அந்த அளவிற்கு  தனியார் கல்வியை நாடிச்செல்லும் மாணவர்களிருக்கின்றார்கள் கனடாவில்.

கனடாவின் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடத்திற்குச் செல்வதாயின் MCAT எனும் ஒரு பிரத்தியேக சோதனையில் மாணவர்கள் சித்தியடையவேண்டும். மாணவர்களுடைய சராசரி எண் எவ்வளவு உயர்வாகயிருப்பினும் அவர்கள் இந்தப் பிரத்தியேக சோதனயில் சித்தியடையாவிட்டால் அவர்கள் மருத்துவபீடத்திற்குள் நுழையமுடியாது. ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இந்த சோதனையில் சித்தியடையாத தமிழ் மாணவர்கள் வேறு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துத் தமது கல்வியைத் தொடர்ந்தார்கள். இது பெற்றோர்களுக்கு மிகவும் வருத்தம் தரும் ஒன்றாகவிருந்தது. தமது குழந்தைகள் நன்றாகப்படிக்கின்றார்கள் நல்ல சராசரியை ஒவ்வொரு வருடமும் பெற்று வருகின்றார்கள் இவர்கள் மருத்துவத்துறைக்குள் சிரமமின்றிச் சென்று விடுவார்கள் என்று நம்பியிருந்தவர்களுக்கு இந்த MCAT சோதனை பெரும் தலையிடியாகவிருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர்கள் வடஅமெரிக்கா நாடுகளில் குறிப்பாக caribbean நாடுகளில் தனியார் மருத்துவக்கல்வி நிலையங்கள் இயங்கிக்கொண்டிருப்பதை அறிந்து தமது குழந்தைகளை அந்த நாடுகளுக்கு மருத்துவம் பயில அனுப்பி வைக்கத் தொடங்கினார்கள். இது ஒரு நோய் போல அனைத்துத் தமிழ் பெற்றோர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. தமது குழந்தைகளின் கல்வி கற்கும் Capacity எவ்வளவு என்பது பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. மருத்துவக்கல்வி நிலையங்களுக்குக் கட்டணம் கட்டத் தம்மிடம் பணமிருந்தால் அது தமது குழந்தைகளை முழு மருத்துவராக்கிவிடும் என்பது தமிழ் பெற்றோரின் கணிப்பு.இதற்காகவே பெற்றோர் இரண்டு மூன்று வேலையென்று நித்திரையின்றி உளன்றுகொண்டுமிருக்கின்றார்கள். எல்லாம் எதற்காக ’எனது மகளோ மகனோ Doctor” என்று பெருமையாகத் தமது சொந்தங்களுக்கோ நண்பர்களுக்கோ சொல்லிக்கொள்ளத்தான். தமது குழந்தைகளுக்கு மருத்துவபீடத்தில் ஆர்வமிருக்கிறதா, அவர்கள் அதைத் தமது எதிர்காலத் தொழிலாகச் செய்யவிரும்புகின்றார்களா என்பது பற்றியெல்லாம் பெற்றோருக்கு அக்கறையில்லை. ”எனது பிள்ளை மருத்துவர்’ என்று மற்றவர்களுக்குப் பெருமையாகச் சொல்லிக்கொள்வதற்காகக் தமது குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி Caribbean நாடுகளுக்கு அனுப்பிவைக்கத் தொடங்கினார்கள். அங்கு போய்ப் படித்து முழுமையாக ஒரு மருத்துவராக வருவதென்றால் அது ஒன்றும் பூப்பிடுங்கும் வேலையில்லை என்பதைத் தற்போது பல பெற்றோர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். வெளிநாட்டு மருத்துவர்கள் கனடாவில் ஒரு மருத்துராகச் செயல்பட வேண்டுமெனின் கனேடியச் சோதனை எடுத்துச் சித்திபெற வேண்டும்  என்பது எல்லோரும் அறிந்ததே. அதற்குள் இந்தக் கரேபியன் மாணர்வளும் அடக்கம்.

சரி இது இப்படியிருக்க, எல்லா விடையங்களும் நாங்கள் நினைப்பது போல் நடந்துவிடுவதில்லை. நண்பரின் பிள்ளை கரேபியனில் போய் படித்து முடித்து கனேடிய சோதனையிலும் சித்தியடைந்து கனடாவில் ஒரு மருத்துவராகக் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார் என்றாள், உடனே நானும் எனது குழந்தையை கடன் பட்டோ. வீட்டை விற்றோ அனுப்பி விட்டு எனது குழந்தையும் கழுத்தில் குழாய் மாட்டியபடி வந்திறங்கப் போகின்றது, வந்து தொழில் துடங்கியதும் நாங்கள் பட்ட கடனை அடைக்கும், விற்ற வீட்டை வாங்கித் தரும் என்று கனவிலிருந்த பல பெற்றோருக்கு ஏமாற்றங்கள் பலவடிவில் வந்து கொண்டிருக்கின்றன. 

படிப்பின் கனத்தைத் தாங்க முடியாமல் படிப்பை இடையில் கைவிட்டு வருகின்றார்கள் மாணவர்கள்.

கரேபினில் மாணர்களுடன் சேர்ந்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகிப் போகின்றார்கள் சிலர். 

படிப்பின் கனம் தாங்காமலும் பெற்றோர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற முடியாமல் போகின்றதே என்ற குற்ற உணர்வாலும் பல மாணவர்கள் மனஉளச்சலுக்கு உள்ளாகின்றார்கள்.

எல்லாவற்றிலும் கொடுமை என்னவென்றால் படிப்பின் கனம் தன்னால் தாங்கமுடியாமலிருக்கின்றது என்று பெற்றோருக்குச் சொல்ல முடியாத தயக்கத்தால் தற்கொலையும் செய்து கொள்கின்றார்கள் சிலர். 

பிள்ளைகளின் கல்விக்காய் தமது வாழ்வைத் தொலைத்த பெற்றோர் தமது குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாமல் தவிப்பதை ஏற்கும் மனப்பான்மையை கொண்டவர்களாக இல்லாமல், முடித்து வந்து மாணவர்களை உதாரணம் காட்டியும், தாம் செலவு செய்த பணத்தைக் காட்டியும்  தமது குழந்தைகளின் மனஉணர்வுகளோடு விளையாடுகின்றார்கள். 

ஒட்டு மொத்தத்தில் கனேடியத் தமிழர்களில் பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பயங்கரக் குழிக்குள் தமது குழந்தைகளையும் இழுத்து விழுத்துகின்றார்கள் என்பதுதான் கொடுமை.


The Medical College Admission Test (MCAT) is a computer-based standardized examination for prospective medical students in the United States and Canada. It is designed to assess problem solving, critical thinking, written analysis, and writing skills in addition to knowledge of scientific concepts and principles

Friday, December 2, 2011

சுமதி ரூபனின் “உறையும் பனிப்பெண்கள்”- தர்மினி

கனடாவில் வசிக்கும் சுமதி ரூபன் குறும்பட இயக்குனர், நாடகநெறியாளர், நடிகை மற்றும் எழுத்தாளர் எனப் பன்முகங் கொண்டவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி’. கடந்த ஆண்டில் வெளியாகிய இரண்டாவது தொகுப்பு ‘ உறையும் பனிப்பெண்கள்’. இதில் பன்னிரண்டு கதைகள் அடங்கியுள்ளன.

புலம்பெயர்ந்தவர்கள் தாம் அந்நியராக உணரும் வாழ்வுகள் , ஏக்கங்கள், ஞாபகங்கள், குற்றவுணர்வுகள்,போலித்தனங்கள், இயந்திரத்தனங்கள் என பலவற்றை அனுபவங்களை அறிந்தவற்றை படைப்புகளாக்குகின்றனர்.சில நேரத்தில் அந்த இயங்குநிலை ஓய்ந்தது போன்று தோன்றும். புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பொன்றைப் படிக்கும் போது நாம் உயிர்ப்புடன் இருப்பதாக மீண்டும் நம்பிக்கை ஏற்படுகிறது.சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பும் அதைத் தருகிறது.

பொதுவாகவே பெண்களின் எழுத்துகள் என்று ஆண்களால் இரகசியமாகவும் சிலவேளைகளில் பகிரங்கமாகவும் புறந்தள்ளப்படுகின்றன.அந்த எழுத்துகள் சொல்வதென்ன என்பதை விளங்கிக் கொள்ள முன்னர்,அந்த எழுத்தாளர் ஒரு பெண்ணாயிருப்பின் ஆண்கள் அப்படைப்பைப் பார்க்கும் விதமே வேறாகிவிடுகின்றது. ஒன்றுக்கும் உதவாதது என ஒதுக்கிவிடப்படும்.அவர்களிடம் அவை பற்றிய முன் முடிவுகள் இருக்கின்றன. இலக்கிய ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள் புறந்தள்ளியும் அலட்சியப்படுத்தியும் தமக்குள் குசுகுசுப்பார்கள்.பெண்களின் எழுத்து என ஒதுக்குதலும் அதையே நாம் பெண்மொழி எனப் பெருமையாகப் பேசுதலும் இங்கு வேறுவேறானவை.
உறையும் பனிப்பெண்கள் எழுத்தைப் பெண்மொழி எனப்பிரித்துப் பார்ப்பதில் உடன்படாத பெண்களும் உண்டு. சமூகத்தில் நாம் ஒடுக்கப்படும் பாலினமாக இருக்கும் வரை எமது பிரச்சைனைகளைப் பேச பிரித்துப் பார்க்க வேண்டுமென்பதே என் கருத்து. எழுத்தாளர் எனும் பொதுவகையில் பேசுவோமாயின் காலகாலமாக பெண்களை வீட்டில் இருத்தி விட்டு அனைத்திலும் முன்நகர்ந்த ஆண்களுடன் பொதுமைப்படுத்தப்படும்.நாம் போராடிப் பெற்றவை சிறிதே. இன்னும் செல்லும் தூரம் அதிகமுண்டு.சமூகத்திலும் குடும்பத்திலும் ஆண்களுக்குக் கிடைக்கும் சலுகைகளைக் கொண்டு படைப்புகளைச் செய்கின்றனர். சமூகத்துடனும் குடும்பச் சுமைகளுடனும் போராடித் தம் படைப்புகளைச் செய்யும் பெண்களுடைய படைப்புகளை வேறுபடுத்தி பெண்மொழி எனச் சொல்வதில்,பெண்களின் தனித்தன்மையை,திறமையை வேறாக்கி மதிப்பிடுதலில் தவறில்லை என்பது என் அபிப்பிராயம். உணர்வுகள்,பிரச்சனைகள் வேறானவை.அவற்றை ஆண்களும் பெண்களும் உணரும் விதமும் வெவ்வேறு விதங்களில் தான்.பெண்களது பல விடயங்களையும் நுணுக்கமாக வெளிப்படுத்துவதும் பெண்களாலே இயலும். நமது கதைகள் வித்தியாசமானவை. அவை சொல்லும் அர்த்தங்கள் வேறு.

சுமதிரூபனின் கதைகளிலும் தனித்தன்மைகளும நுட்பங்களும் நிறைந்துள்ளன.புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் தன்னகத்தே கொண்டுள்ள பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிப் பன்னிரு கதைகளும் பேசுகின்றன.படிக்கச் சோர்வேற்படுத்தாத கதைகள்.சுவாரசியமான வசனங்களும் சம்பவங்களும் கொண்டு சொல்லப்படுகின்றன. இலகுவாகக் கதைகளினுள் நம்மால் நுழைந்து கொள்ள முடிகிறது. அவர் ஒரு குறும்பட இயக்குனராகத் திறமையாகச் செயற்படுவது கதைகளிலும் மிளிர்கின்றது.சுமதிரூபன் காட்சிகளை விபரிக்கும் போது கச்சிதமாக அழகாக அமைகின்றன.சுவாரசியமாகவும் செறிவுடனும் படைக்கப்பட்ட பாத்திரங்கள்.அவர்களின் மனப் போராட்டங்கள். மூடி மறைக்கும் மனித மனசின் மறைவுகளைச் சற்றும் தயக்கமின்றி நம் முன் வைக்கிறார்.கேள்விகளை எழச் செய்கிறர்.

அமானுஷ்ய சாட்சியங்கள்,40 பிளஸ்,ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி, நஷ்டஈடு, சூட் வாங்கப் போறன் ஆகிய கதைகளில் ஆண்களின் போலித்தனங்களும் மனப் போராட்டங்களுமாகவும் சொல்லப்படுகின்றன. அமானுஷ்ய சாட்சியங்கள் ,பெண்கள் நான் கணிக்கின்றேன்,உறையும் பனிப் பெண்,இருள்களால் ஆன கதவு,மூளி,எனக்கும் ஒரு வரம் கொடு ஆகிய சிறுகதைகளில் பெண்களின் வெப்புசாரங்களும் சொல்லாத் துயர்களும் பரவிக் கிடக்கின்றன.

மூளி , எனக்கும் ஒரு வரம் கொடு…கதைகள் சாமத்தியச்சடங்கு, பிள்ளைப் பேறு , கோயிலில் பார்ப்பனக் குருக்களுக்குப் பணிவிடை செய்தல் பற்றிப் பேசிய போதும் , நம் சமூகம் புலம்பெயர்ந்தும் கொண்டு செல்லும் மூடத்தனங்களையே சாடுகின்றன.அவை பெண்களை ஒதுக்கி வைப்பதும் தாழ்வுணர்ச்சி கொள்ளச் செய்வதுமாகத் துன்புறுத்துகின்றன.

பெண்கள் நான் கணிக்கின்றேன்- என்ற கதையின் உரையாடல்களில் ஏன் கல்யாணஞ் செய்யாமல் வாழ்கிறாய் எனக் கேட்டுக்கொண்டிருக்கும் தோழியைப் பார்த்து அப் பெண இவ்வாறு கேட்கிறாள்’ஏன் கல்யாணம் கட்டினனீ?பிள்ளைகளைப் பெத்தனீ?எண்டு நான் உன்னட்ட எப்பவாவது கேட்டனானா? என்பது இச்சமூகத்தை நோக்கிக் கேட்கும் கேள்விகள்.திரும்பத் திரும்ப குடும்பம் ,குழந்தைகள் என்ற கட்டுகளைப் போட்டு இப்படி வாழ்வதுதான் பிறப்பின் அர்த்தம் என்று சொல்லித் தானே வளர்க்கப்படுகின்றோம்.

முற்றிலும் வேறான காலநிலைகள், கலாச்சாரங்கள்,மொழிகள், மனிதர்கள், சட்டதிட்டங்கள்,அகதிஅந்தஸ்து கோருதல்,வேலைகள் என அகதிகளாகிக் குடியேறிய நாடுகளில் புலம்பெயர்ந்த இச்சனங்களின் பிரச்சனைகளோ பல. அவற்றை எதிர் கொள்ளும் குடும்பங்களில் ஏற்படும் உரசல்களும் உளப்பிரச்சனைகளும் இன்னும் பல. இவற்றை நுண்மையாக இக்கதைகள் சொல்கின்றன.அவை பற்றித் தொடர்ந்தும் யோசிக்க
வைக்கின்றன. ஏனெனில் இவை எதுவும் பொய்யாகவோ புனைவாகவோ இருப்பதாய் நினைக்கத் தோன்றவில்லை.நாளாந்தம் இவ்விதமான மனிதர்களைச் சந்திக்கின்றோம்.ஏன் நம்மிடம் கூட அவர்களைக் காணலாம்.

கருப்புப்பிரதிகள் வெளியீடாகிய இத்தொகுப்புப் பற்றி நீலகண்டன் “எந்த முன்முடிவுகளும், பாசாங்குகளுமின்றி வாழ்வின் மீதும், இருப்புசார் சூழலின் மீதும் கேள்விகளை எழுப்பிச் செல்லும் இச்சிறுகதைகள் மனதைத் தொடும் நுண்அலகுகளால் நெய்யப்பட்டிருக்கின்றன” என்கிறார்.

Wednesday, October 19, 2011

“உனையே மயல் கொண்டு”



‘படைப்பாளி விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்ற கருத்து மிக வலுவாக பல்வேறு வடிவங்களில் இருந்து வருகின்றது. இவ்வாறான எண்ணம் நம் சூழலில் தோன்றவும் காலப்போக்கில் உறுதிப்பட்டு வரவும் பல காரணங்கள் இருக்கின்றன. நம் மொழியில் விமர்சன தர்மத்தைப் போற்றிக் கூறாத படைப்பாளியும் இல்லை, விமர்சனத்தை உள்ளு+ர அசௌகரியமாகக் கருதாத படைப்பாளியும் இல்லை. விமர்சகரிடம் படைப்பாளி எதிர்பார்ப்பது விமர்சனம் என்ற போர்வையில் நிகழ்த்தப்படும் பராட்டுக்களைத்தான்.
விமர்சகனிடமிருந்து வாசகன் படைப்புச் சார்ந்து பல நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவ்வாய்ப்பையே தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகத்தான் நம் படைப்பாளி பார்க்கின்றான். வாசகன் வாசிப்புச் சார்ந்த நுட்பங்களில் தேர்ச்சி பெற்று மிக மேலான படைப்பாற்றலை படைப்பில் எதிர்பார்க்கும் சூழல் உருவானால் அவனைத் தன்னால் திருப்தி செய்ய முடியாமல் போய்விடும் என்ற கவலை படைப்பாளியை உள்ளு+ற அரித்துக் கொண்டிருக்கிறது. கூடுமானவரையில் சகபடைப்பாளிகளின் படைப்புக்களைப் புகழ்ந்து கூறி அதற்குப் பதிலாகத் தனது படைப்புகளுக்குச் சகபடைப்பாளியின் பராட்டை உறுதி செய்து வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமான செயலாக நம் படைப்பாளிகளுக்குப் படுகிறது.

படைப்பாளி விமர்சனத்தில் ஈடுபடும் போது தனது படைப்புகளுக்கான ஆதரவை இழக்கும் சூழலை அவனே உருவாக்கிக் கொள்கின்றான் என்ற எண்ணமும் இங்கு இருந்து வருகின்றது. கண்ணெட்டும் தூரம் வரையிலும் வாசகனைக் காணக்கிடைக்காத சூழலில் சக படைப்பாளியின் ஆதரவை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி, தனக்குக் கிடைத்திருக்கும் சிறு வெளியை விமர்சனக் கருத்துக்களை வெளிப்படுத்தி இழக்கவோ, குறைத்துக் கொள்ளவோ விரும்புவதில்லை. ஒரு படைப்பாளி விமர்சகனாகச் செயல்படும் போது விமர்சனத்தில் அவன் வெளிப்படுத்திய கருத்துக்களின் எதிர்வினையாக அவன் படைப்பு தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறு எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் படைப்பாளி விமர்சகனாவும் செயல்படுவது தமிழ்ச் சூழலில் புத்திசாலித்தனமான காரியமாக இல்லை. தனக்கென்று ஒரு பார்வையும் விமர்சனமும் கொண்ட படைப்பாளிக்கு இலக்கிய வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருக்கும்’.

காற்றில் கலந்த பேரோசை - சுந்தர ராமசாமி

“உனையே மயல் கொண்டு” என்ற நடேசனின் இரண்டாவது நாவலை எந்தத் தளத்தில் இருத்தி விமர்சிப்பது என்ற கேள்வி எனக்குள் எழுந்த வண்ணமிருக்கின்றது. உலக இயக்கியங்களில் முன்னணியிலிருக்கும் நாவல்களைத் தேடி வாசிக்கும் பரிச்சயம் கொண்ட எனக்குள் தரமாக படைப்பு என்பதற்கான ஒரு தளம் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டது. இருந்தும் உலக இலக்கியங்களுடன் நடேசனின் நாவலை ஒப்பீட்டளவில் பார்க்க முடியாது என்ற தார்பரியத்தை அறிந்தவள் என்ற வகையிலும், தமிழ் இயக்கியம், அல்லாவிடின் புலம்பெயர் இலக்கியம் என்ற தளத்தில் இருத்திப் பார்ப்பதா? அன்றேல் ஒப்பீட்டுத் தன்மையை விடுத்து ஒரு ஆர்வமுள்ள எழுத்தாளின் படைப்பாக மட்டுமே பார்த்து விமர்சிப்பதா? வெறுமனே ஆர்வமுள்ள படைப்பாளி என்ற பார்வை, பல விட்டுக்கொடுப்புகளுக்கு விமர்சகரைத் தள்ளிவிடும்.

புலம்பெயர் இலக்கியங்கள் எப்போதுமே வரவேற்கப்படவேண்டியவை. அதே நேரம் நேர்மையான விமர்சனங்களையும் அவை வேண்டி நிற்பவை என்ற எண்ணத்தோடு எனது விமர்சனத்தை வைக்கின்றேன்.

“உனையே மயல் கொண்டு” என்ற இந்த படைப்பு புலம்பெயர் இலக்கியத்தில் இதுவரை கூறப்படாத கருத்தளங்களைத் தாங்கி நிற்பது இப்படைப்பிற்கு வலுவைச் சேர்க்கின்றது. இருந்தும் இக் கருத்தளங்கள் விரிவாகவும், ஆழமாகவும் கூறப்பட்டதா என்றால்? விமர்சகர் என்ற வகையில் இல்லை என்றே என்னால் கூற முடியும். மிகவும் தட்டையான ஒரு பார்வையைத் தான் எழுத்தாளர் நடேசன் கையாண்டுள்ளார். இவரின் இந்த எழுத்து முறையை இவரின் முதல் நாவலான “வண்ணாத்திக்குளம்” எனும் நாவலிலும் காணக்கூடியதாக இருந்தது. படைப்பாளி தனது சமூக நோக்கத்தை வலுவோடு நிறுவும் அளவிற்கு படைப்பு வலுவானதாக இருக்க வேண்டும். படைப்புகள் வலுவான சமூக நோக்கத்தை மேலோட்டமாக வழங்கினால் வாசகனால் அதனை ஆழமாக அறிந்து கொள்ள முடியாமல் போய் விடும்.

“உனையே மயல் கொண்டு” நாவல் “பைபோலர்” நோயால் பாதிக்கப்படும் சோபா எனும் ஒரு பெண்ணைச் சுற்றியதாக அமைத்திருக்கின்றது. இருந்தும் சோபாவின் கணவனான சநதிரனே இந்நாவலின் முக்கிய நாயகன். நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணால் கிடைக்காத உடல் சுகத்திற்கான ஏங்கும் ஒரு சுயநல மனிதனாக சந்திரன் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
சோபாவில் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட துர்சம்பவங்கள் அவளின் மகப்பேறிற்குப் பின்பாக “பைபோலர்” நோயாக மாறியுள்ளது. இளம் வயதில் சிங்களக்காடையர்களால் சோபா நடு வீதியில் நிர்வாணமாக்கப்பட்டதும். அவளின் சகோதரனான கார்த்திக் “ரெலோ” இயக்கத்தில் இணைந்து பின்னர் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டதும் அவள் மனதில் ஆழமாகப்பதிந்து அவளை ஒரு நோயாளியாக மாற்றிவிட்டிருக்கின்றது என்று சொன்ன எழுத்தாளர் வாசகர்களின் மனதில் காயம் வரும் வகையில் எந்தச்சம்பவங்ளைச் சித்தரிக்கவில்லை என்பது மிகவும் ஏமாற்றமாகவே உள்ளது. ஈழத்து அரசியலின் இருண்ட பக்கங்களுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நோயாளிக்கும் கொடுக்காத முக்கியத்தை ஒரு ஆணின் பாலியல் தேவைக்கு எழுத்தாளர் கொடுத்திருக்கின்றார். ஒரு ஆணின் பாலியல் தேவையை முன்நிறத்தி நாவல் எழுத எழுத்தாளர் நினைத்திருப்பின் எதற்காக “பைபோலர”; நோயையும், ஈழத்து அரசியலின் மறைக்கபட்ட சம்பவங்களையும் வெறுமனே தொட்டுச் சென்று வீணடிக்க வேண்டும். இந்த இரண்டு கருக்களும் ஆய்வோடு ஒரு முழுநீள நாவலாக வழங்கப்படவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை.
தனது பாலியல் தேவைக்காக சாந்தன், ஜீலியா எனும் வெள்ளை இனப்பெண்ணோடு தொடர்பு வைக்கின்றான். இது இயற்கையானதே. உறவின் தொடர்ச்சியில் ஜீலியா வேறு ஒரு ஆணோடு நெருக்கமாக இருப்பதைக் கண்ட சாந்தன் ஜீலியாவை இவள் வெறும் “விபச்சாரி” என்று பேசிவிட்டுப் போகின்றான். இச் சம்பவங்கள் அனைத்தும், ஜீலியா ஒரு வெள்ளை இனப்பெண்ணாக இருப்பதனால் படைப்பாளியால் சுமூகமாக சித்தரிக்க முடிந்திருக்கின்றது. இந்த ஜீலியா எனும் பாத்திரத்தை ஒரு ஜனனியாகவோ அல்லாவிடின் ஜானகியாகவோ நிறுத்திப் படைப்பாளியால் பார்த்திருக்க முடியுமா? பக்கம் 58 இல் தாய்மை பெண்மைக்கான படைப்பாளியில் பார்வை சொல்லப்படுகின்றது. “இது பெண்களுக்கு மட்டும் உள்ள உயரிய குணமா?” என்ற கேள்வியையும் படைப்பாளி முன் வைத்து, பெண்களுக்குரிய உயரிய உயர்ந்த குணத்தை உறுதிப்படுத்துகின்றார்.
ஆழப்பார்க்கின் பல பலவீனங்களைத் தன்னகத்தே கொண்ட இந்நாவலில், என் மனதில் நிற்கும் ஒரே பாத்திரம் சில பக்கங்களில் மட்டு;ம் வந்து போகும் “மஞ்சுளா” தான். காதலித்துவிட்டோம், பழகிவிட்டோம், பலருக்குத் தெரிந்து விட்டதே என்ற ஒரே காரணத்திற்காக எதிர்காலத்தை எண்ணாது ஒத்துவாராத உறவை இணைத்துக்கொள்ளும் நிலையில் இன்றும் பல பெண்கள் இருக்கும் எமது சமுதாயத்தில், யதார்த்தமாகச் சிந்தித்து இருவரின் எதிர்கால நன்மைக்காகத் தனது காதலைத் துறப்பவள் மஞ்சுளா. இத்தெளிவு எல்லாப் பெண்களுக்கும் இருப்பதில்லை.
சாந்தன் சராசரி ஆணிற்கும் மேலானவன் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெறுவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளான், இந்த சராசரி ஆணுக்கும் மேலானவனுக்கு தனது மனைவியின் மனோவியாதியைப் புரிந்து கொண்டு தக்க சிகிச்சை அளிக்காமல் “மனநோய் என்பதை மறைத்து வைப்பதே எமது நடைமுறை, அந்த மனப்பான்மை இங்கேயும் தொடர்கிறது” பக்கம் 74: என்று எப்படி சராசரிக்கும் கீழாகச் சென்று வசனம் பேச முடிகிறது?
சோபா, ஜீலியா, சாந்தன் போன்றவர்களின் பிரத்தியேகத் தன்மை நாவலில் அடையாளம் காட்டப்படவில்லை என்றாலும் நாவலின் இறுதியில் நோயில் இருந்து மீண்ட சோபா தன் வாழ்வு பற்றித் தெளிவான ஒரு முடிவை எடுப்பது நாவலை வலுப்படுத்துகின்றது.
தனது முதல் நாவலுக்கு தனித்தன்மை கொண்ட “வண்ணாத்திக்குளம்” எனும் தலைபை இட்ட நடேசன் இந்நாவலுக்கு தமிழ் சினிமாத் தனத்துடன் தலைப்பிட்டிருக்கின்றார். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் புலம்பெயர் எழுத்தாளர்களில் நடேனும் ஒருவர் என்பது மறுக்க முடியாதது. இன்னும் கவனம் எடுப்பின் கனமான படைப்புக்களை நடேசனால் தரமுடியும்.


நேர்காணல்

உங்கள் கலை, இலக்கிய ஈடுபாட்டின் பின்னணி எதுவாக இருந்ததாகக் கருதுகிறீர்கள்?

என்னுடைய குடும்பச்சூழல் என்றுதான் கூற முடியும். எனது குடும்பம் மாற்றுக்கருத்துக்களை ஆதரிக்கும் ஒரு முற்போக்குக் குடும்பமாகத்தான் நான் பார்க்கின்றேன். எனது பெற்றோர் நிறையவே வாசிக்கும் பழக்கம் கொண்ட தமிழ் ஆசிரியர்கள், எனது வீட்டில் அனைத்து இந்தியச் சஞ்சிகைகளும் இறைந்து கிடக்கும். சின்ன வயதிலேயே, பெரியாரின் சிந்தனைகளைகள், ஜானகிராமன், ஜெயகாந்தன், எஸ்.போ, கணேகலிங்கம் போன்றோரை வாசித்து வளர்ந்தவள் நான். கலை எனும் போது எனது அம்மா முறைப்படி நடனம் பயின்றவர், தனது பாடசாலைக் கலைநிகழ்ச்சிகளுக்காக பல நடனங்களை மேடை ஏற்றியிருக்கின்றார் அதில் பலவற்றில் நானும் பங்கு கொண்டிருக்கின்றேன்.

இந்த வாசிப்பின் ஆர்வம் இலங்கையிலேயே எழுத்து முயற்சியாகத் துவங்காததின் இடையூறுகள் எவையாக இருந்தன? சமூக, அரசியற் புலமா? அல்;லது பொதுவாகவே இலங்கை ஒரு பின்தங்கிய நாடாக இருந்ததென்பது காரணமா?

இரண்டுமில்லை. இதற்கும் எனது பெற்றோர்தான் காரணம் என்று கூறுவேன். இந்திய சஞ்சிகைகள், நாவல்கள், ஈழத்து நாவல்கள் போன்றவற்றிற்கு முக்கியம் கொடுத்தவர்கள் ஈழத்து சிறுசஞ்சிகைகள், பத்திரிகைகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் எனது வீட்டிற்கு மிக அருகில் வாசகசாலை ஒன்று இருந்தது, அங்கு சென்று எனது அண்ணாக்களும், அப்பாவும் பத்திரிகைகளைப் படித்து வந்தார்கள், அங்கு பெண்களுக்கு அனுமதியில்லை. முற்போக்காக எனது குடும்பம் இருந்ததே தவிர புரட்சியாக எதையும் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்ததில்லை. இந்திய சஞ்சிகைகளிலும், நாவல்களிலும் நாங்கள் நிறைவைப் பெற்றிருந்தோம், இதனால் ஈழப் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த சிறுகதைகளின் அறிமுகம் எனக்குக் கிடைக்கவில்லை. எழுத்து என்றார் பெரிதாகப் பேசப்பட்டவர்களால் மட்டும்தான் முடியும் என்று நான் அப்போது நம்பிக்கொண்டிருந்தேன். சிலவேளைகளில் சிறுசஞ்சிகைளில், பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த சிறுகதைகளை நான் படிக்க நேர்ந்திருந்தால் நானும் எழுத முயற்சித்திருப்பேனோ என்னவோ. வானொலில் அப்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருந்த நாடகங்கள், இசையும்கதையும் போன்றவை என்னைக் கவரவில்லை. அதனால் எழுதும் முயற்சி என்பதை நான் எண்ணிப்பார்கவேயில்லை.

உங்களது புலப்பெயர்வு எப்போது, எதனாலாய் இருந்தது?

நான் 83இன் கடைசியில் ஒல்லாந்து நாட்டிற்குச் சென்றேன். எனது அக்கா வசந்திராஜாவின் கணவர் அங்கே மேற்படிப்பிற்காகச் சென்றிருந்தார், அவரோடு எனது அக்காவும் அங்கு சென்றிருந்தார். அவர்களது மூன்று பிள்ளைகளுயும் சில மாதங்கள் எனது பராமரிப்பில் கோண்டாவிலில் இருந்தார்கள். பின்னர் பிள்ளைகளை அவர்கள் அங்கு அழைத்தபோது அவர்களுக்குத் துணையாகச் செல்வதற்கென்று நான் விசா எடுத்து அவர்களுடன் சென்றேன். அப்போது விசா எடுப்பது மிகவும் இலவுவாக இருந்தது. பின்னர் விசா முடிந்தவுடன் அங்கேயே அகதி வதிவுரிமை பெற்றுத் தங்கிவிட்டேன். திருமணத்தின் பின்னர் சிலவருடங்கள் பெல்ஜியத்தில் வாழ்ந்து 89இன் கடைசியில் கனடா வந்தேன். கனடாவில் உங்கள் எழுத்தின் ஆரம்பம் இருந்ததெனில் அதற்கான உந்துவிசை என்ன? இலக்கியத்தின் எந்த வகைமையை நீங்கள் உங்கள் வெளிப்;பாட்டு ஊடகமாகத் தேர்ந்தெடுத்தீர்கள்? அதில் உங்களது முதல் படைப்பு என்ன? கனடாவில் பல வருடங்களாக நான் வீட்டிலிருந்து குடும்பத்தைப் பராமரித்து வந்தேன் என்று சொல்லலாம். எனது குடும்பத்தின் ஒரு அங்கத்தவரைத் தவிர, எனது மூத்த அண்ணா இங்கிலாந்தில் வசிக்கின்றார், மற்றைய எல்லோரும் கனடாவில்தான் வசித்து வருகின்றோம், எல்லோரும் ஒரே உயர்மாடிக் கட்டிடத்தில் வௌ;வேறு தளங்களில் அப்போது இருந்தோம். அப்போது கனடாவில் வெளியாகிக் கொண்டிருந்த தாயகம், செந்தாமரை போன்ற பத்திரிகைகளை நாங்கள் அதிகம் வாசிப்பதுண்டு. தாயகம் பத்திரிகையின் அரசியலோடு எங்கள் குடும்பம் மிகவும் ஒத்துப் போனதென்று கூற முடியும். அந்தப் பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருந்தன அவற்றைப் படித்து வந்த எனக்கு எழுதும் ஆர்வரம் வந்தது. எனது முதல் சிறுகதை தாயகம் பத்திரிகையில் வெளிவந்தது. கதையின் பெயர் நினைவிற்குச் சரியாக வரவில்லை “ஜீவன்” என்று நம்புகின்றேன். அதன் பின்னர் தாயகம் ஆசிரியர் ஜோர்ச் குருசேர் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்தும் சிறுகதைகளை எழுதும் படி கேட்டிருந்தார். அது எனக்கு ஒரு உந்து சத்தியாக இருந்ததால் தொடர்ந்து நான் பல சிறுகதைகளை தாயகத்திற்காக எழுதினேன். ஒரு தொடர்கதையும் எழுதியதாக ஞாபகம். அப்போதுதான் ரதன் என்னோடு தொலைபேசியில் n;தாடர்பு கொண்டு தாங்கள் இலக்கியக் கூட்டங்கள் நடாத்துவதாகவும் என்னால் கலந்து கொள்ள முடியுமா என்றும் கேட்டிருந்தார். நானும் கலந்து கொள்ளத் தொடங்கினேன்.

தாயகம் அப்போது கனடாவிலிருந்த தமிழ் அரசியலின் பொது நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருந்த இதழ். அதில் எழுத ஆரம்பித்தபோது, அந்த இதழின் அரசியல் போக்கு உங்களுக்கு உடன்பாடாக இருந்ததா? அந்த உடன்பாட்டுணர்வையே படைப்புகளிலும் வெளிப்படுத்தினீர்களா?

எனக்கு அரசியல் அனுபவம் அதிகம் இருக்கவில்லை, வீட்டில் அப்பா அண்ணன்மார்கள் உரையாடும் போது கலந்து கொள்வதோடு சரி, ஊரில் என்ன நடக்கின்றது, அதன் அரசியல் போக்கு எப்படியாக உள்ளது என்பதை பத்திரிகைகளில் படித்து அறிந்து கொள்வதுண்டு. ஆனால் எனது சிறுகதை ஆர்வம் எப்போதும் ஈழ அரசியல் தவிர்ந்த சமூகச்சிந்தனை கொண்டதாகவே அமைந்திருந்தன. அதுவும் ஏனோ தெரியவில்லை தொடக்கத்திலிருந்தே நான் எழுதிய சிறுகதைகள் புலம்பெயர்ந்த மண்ணை குறிப்பாகக் கனடாவைத் தளமாக வைத்தே அமைந்திருந்தன. உள்நாட்டுப் போரின் பாதிப்பை நான் நேரில் அறிந்திராததாலோ என்னவோ போரைப் பின்னணியாகக் கொண்ட படைப்புகளை எழுதுவதைத் தவிர்த்துவந்தேன். இருந்தும் போரை எப்படி புலம்பெயர் நாடுகளில் தமது சுயநலத்திற்காக உபயோகப்படுத்திகின்றார்கள் என்பதைப் பின்னணியாக வைத்து ஒரு சிறுகதையை எழுதியதாக ஞாபகம் கதையின் பெயரை மறந்து விட்டேன். இச்சிறுகதை “பொதிகை” பத்திரிகையில் வெளியாகியது என்று நம்புகின்றேன். உங்கள் படைப்புக்கள் உங்களது கருத்துநிலை சார்ந்த இதழ்களில் மட்டுமே வெளிவந்தனவா? அல்லது பல்வேறு பத்திரிகை இதழ்களுக்கும் எழுதினீர்களா? பல சிறுகதைகளை நான் தாயகம் பத்திரிகைகளுக்கு எழுதிய பின்னர், தாயகம் எப்போது நிறுத்தப்பட்டது என்று நினைவில் இல்லை, எனக்கு எனது அப்பா பிறந்தநான் பரிசாக சி.ரீ.பி.சி வானொலி ஒன்றைப் பரிசாகத் தந்தார், அதன் பின்னர் நான் பல சிறுகதைகள், இசையும் கதைகள், கவிதைகள், விமர்சனங்கள், வானொலி நாடகங்கள் என்று எழுதத் தொடங்கிவிட்டேன். அதே வேளை பிரான்சிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த எக்ஸில் சிறுசஞ்சிகைக்கும் சில கவிதைகள் எழுதியதாக ஞாபகம், எக்ஸில் ஆசிரியர்கள் பிரிந்து உயிர்நிழலாக வெளிவந்த போது நான் பல சிறுகதைகள் கவிதைகள் விமர்சனங்களை உயிர்நிழலிற்காக எழுதினேன். தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

உங்களுக்கு நாடக ஈடுபாடு இருந்திருக்கிறது. அது இலங்கையில் ஏற்பட்டதாக இருக்கவில்லை. இங்கே அதன் ஆரம்பத்தின் புள்ளி எது?

எனக்கு நாடக ஆர்வம் இருந்ததாகக் கூற முடியாது. நான் மேடை நாடகம் நடிக்கத் தொடங்கியது, தமிழ் சினிமா நடிகைகள் கூறுவது போல ஒரு விபத்து என்றுதான் கூறமுடியும். அரங்காடல் நிகழ்விற்காக “இன்னொன்று வெளி” என்ற நாடகத்திற்கு ஓர் முதிர்கன்னிப் பாத்திரத்தை ப.அ ஜெயகரன் என்னை நடிக்க முடியுமா என்று கேட்டார். என்னால் நடிக்க முடியுமா என்று எனக்கு அப்போது தெரியவில்லை முயன்று பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் ஒத்துக் கொண்டேன். நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதன் பின்னர் எனக்கு மேடை நாடகங்கள் மேல் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து பல நாடகங்களில் நடித்து வருகின்றேன். அந்த ஆர்வம் என்னை பல ஆங்கில நாடகங்களை ரொடொன்டோ நகரில் சென்று பார்க்க வைத்தது. நாடகப் பிரதிகளை எழுதவும் வைத்தது. துற்போது ஓர் நாடகத்திற்காக எனக்கு வுழசழவெழ யுசவ ஊழரnஉடை இடமிருந்து சிறிய உதவிப்பணமும் கிடைத்திருக்கின்றது. இதை நான் என் ஆர்வத்தில் ஏற்பட்ட வளர்சியாகவே பாரக்கின்றேன்.

ரிவிஐ தொலைக்காட்சியில் உங்கள் அனுபவம்? அதுவே குறும்பட தயாரிப்புக்கான ஆர்வத்தைத் தந்ததா?

ரிவிஐத் தொலைக்காட்;சி இந்திய ஞனரஞ்சகத்தையும், ஈழப்போரையும் மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வர்த்தக நிலையம். அதனை ஓர் கலைக்கு, அல்லது ஈழ அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் ஊடகமாக என்னால் பார்க்க முடிவில்லை. மனோப்பொலியாக அது இயங்கிக் கொண்டிருப்பதால் வேறுவழியில்லாமல் எனக்கு இருந்த ஆர்வத்தில் போய்ச் சேர்ந்துவிட்டேன். பின்னர் அவமானப்பட்டு மூக்குடை பட்டுப் பாடம் கற்றுக்கொண்டு வெளியில் வந்துவிட்டேன் என்று சுருக்கமாகச் சொல்லலாம். அங்கு உயர்பதவியிலில் இருக்கும் அனைவருக்குமே ஆர்வம் உள்ள இளையவர்களை உபயோகித்தும், ஈழப்போரட்டத்தை உபயோகித்தும் பணம் பண்ணுவதும்தான் முக்கிய நோக்கமாக உள்ளது. அப்படியான ஓர் எனக்குச் சிறிதும் ஒத்துவராத இடத்திற்குள் நுழைந்தது என் தவறேதவிர அவர்களின் தவறல்ல. “அவர்கள் அப்படித்தான்” ஒரு நல்ல விடையம் என்னவென்றால் நான் அங்குதான் எனது நண்பன் ரூபனைச் சந்தித்தேன், படப்பிடிப்பு, தொகுப்பு போன்றவற்றில் ஆர்வம் உள்ள ரூபனோடு இணைந்து எனது சிறுகதைகள் சிலவற்றை நாங்கள் குறும்படமாக “நிர்வாணாக்கிரியேஷன்ஸ்” என்ற பெயரின் கீழ் தயாரித்திருந்தோம்.

உங்களுடைய கலை இலக்கிய முயற்சிகள் பெரும்பாலும் சமூகம்சார்ந்ததைவிட பெண்ணிலை சார்ந்ததாகவே இருந்திருக்கிறதாய்ப் படுகிறது. அதற்கான காரணம் எதுவாக இருந்ததாய் எண்ணுகிறீர்கள்?

பெண்;ணிலை என்பது சமூகம் சார்ந்தது இல்லையா? விழிம்புநிலை மக்கள் தங்கள் சமூகம் சார்ந்து தங்கள் நேரடிப்பாதிப்புக்களைத்தான் படைப்பாக்குவர் என்பது உலகறிந்த விடையம். அதில்தான் அவர்கள் வெற்றியும் காணமுடியும். என்னை எது அதிகம் பாதிக்கின்றதோ அதுதான் என் உள்ளுணர்விற்குள் உருண்டு கொண்டிருந்து ஒரு கட்டத்தில் படைப்பாக வெளிவரும். பாமாவின் படைப்புகள் பெண்ணிலை சார்ந்ததாக அமைவதைவிடத் தலித்திலக்கியமாகிப் போனதற்கும் இதுதான் காரணம். நான் எதிர்கொண்ட, கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுமே நான் பெண்ணாகிப் போனதால் ஏற்பட்டவைதான். அதனால் என்னிடமிருந்து அப்படியான படைப்புகளைத்தான் அதிகம் வெளிவரும்.

சில பெண்கள் இலக்கியச் சந்திப்புக்களிலும் கலந்துகொண்டுள்ளீர்கள். அவை குறித்த அனுபவம் என்ன? தமிழிலக்கியத்தின் காத்திரமான வளர்ச்சிக்கு இவைபோன்ற பெண்கள் இலக்கியச் சந்திப்புக்கள் எவ்வகையான பங்காற்ற முடியுமென எண்ணுகிறீர்கள்?

நான் லண்டனில் இடம்பெற்ற ஒரு பெண்கள் சந்திப்பில் மட்டும்தான் கலந்து கொண்டிருக்கின்றேன். பல பெண்படைப்பாளிகளை பெயரளவில் மட்டும் அறிந்திருந்தேன். நேரடியாகக் காணும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஐரோப்பியாவிலும், இலங்கையிலுமிருந்து பல பெண்கள் வந்து கலந்து கொண்டிருந்தார்கள். எல்லா அமைப்புக்குள்ளும் அரசியல் இருப்பது போல் பெண்கள் சந்திப்பிற்குள்ளும் பல அரசியல்கள் இருக்கின்றது, விட்டு விலகியவர்கள், புதிதாக இணைந்து கொண்டவர்கள் என்று அது நகர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தனை வருடங்களாக நிறுத்தப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது பெருமையும், சந்தோஷமும் தரக்கூடிய விடையமே.

இவையே கனடாவி;ல் பெண்கள் சந்திப்பை நடாத்த உங்களைத் தூண்டியிருக்க முடியும். கனடா பெண்கள் சந்திப்பு வெற்றிகரமாக இருந்ததா?

நிச்சயமாக. புலம்பெயர் பெண் இலக்கியவாதிகள் பலரும், இந்தியாவிலிருந்து மாலதி மைத்ரியும், வந்து கலந்து கொண்டிருந்தார்கள். கனடாவிலிருந்தும் பலவிதமான பெண் படைப்பாளிகள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்த ஓரே இலக்கிய நிகழ்வு இது ஒன்றுதான். ஒரே தளத்தில் ஒரே சிந்தனையிலிருக்கும் பெண்கள் திரும்பத் திரும்பக் கலந்து கொள்வதாய் அமையாமல் பலதளங்களிலிருந்துமிருந்து பல பெண்கள் வந்து கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நிகழ்வைப் பல சிரமங்களுக்கு மத்தியில் ஒழுங்கமைத்திருந்தேன். நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது. அதே நேரம் ஈழ அரசியலில் நேரடி எதிர்க்கருத்துக்களைக் கொண்ட பெண்கள் கலந்து கொண்டதால் கலந்துரையாடலின் போது சிறிது சர்ச்சையாகிப் போனது. அதுவும் கூட இந்நிகழ்வின் வெற்றிதான். ஒத்த கருத்தைக் கொண்ட கூட்டம் திரும்பத்திரும்ப ஒரே விதமாகக் கலந்துரையாடிக்கொண்டிருப்பது என்பது என்னைப் பொறுத்தவரையில் வெறும் நேர விரையம் மட்டும்தான்.

இதுபற்றி பல மாற்றுக் கருத்துக்கள் பெண்கள் அமைப்புகளுக்கூடாகவே கிளர்ந்தன. அவைபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 நான் முதலே கூறியது போல் நிறம்பவே அரசியல் இதற்குள்ளும் உள்ளது. நடந்தேறிய பின்னர் நீங்கள் இப்படிச் செய்தது பிழை நீங்கள் இவர்களை அழைத்தது பிழை என்பது போன்ற பல கருத்துக்கள் வந்தன. அது பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஒரு தலமையில் கீழ் பெண்கள் சந்திப்பு இயங்கவில்லை என்பதை கடந்த வருடம் இந்நிகழ்வை நடாத்தி வந்தவர்கள் உறுதியளித்த பின்னர்தான் நான் கனடாவில் எடுத்துச் செய்யச் சம்மதித்தேன், என்னால் சிறப்பாக பல பெண்களைக் இணைத்துக் கொண்டு பலவிதமான பெண்களின் பிரச்சனைகளையும் நிகழ்வின் மூலம் வெளிக்கொணர முடியும் என்பதில் நம்பிக்கையிருந்தது. அதை நான் நிறைவேற்றியும் உள்ளேன்.

தீவிரமான பெண்ணியவாதத்தை ஆதரிக்கும் நீங்கள் சமூகரீதியாக எதிர்ப்பட்டிருக்கக்கூடிய எதிர்ப்புக்கள் என்னவாக இருந்தன? இவை குடும்பமளவில் பாதிப்பைச் செய்தனவா?

எங்கள் சமூகம் மிகவும் பிற்போக்குத்தனமானது. பெண்களை அவர்கள் தங்கள் கற்பிதங்கள் மூலம் அறிந்து கொண்டிருக்கின்றார்கள். அதிலிருந்து விலகும் பெண்கள் அவர்களை மிகவும் அசூயைக்கு உட்படுத்துவார்கள் என்பதை நான் அறியாதவள் அல்ல. அதைத்தான் நான் எமது சமூகத்திற்குச் செய்துகொண்டிருக்கின்றேன். எனது திருமண முறிவிற்கும் இது ஓர் காணரம்தான். சமூகத்தையும், கணவனையும் திருப்திப்படுத்துவதை நான் என் வேலையாகப் பார்க்கவில்லை. என் சுயத்தை இழந்து கிடைக்கும் பெயர் எனக்கு ஒரு பொருட்டேயல்ல. என் வாழ்க்கை என்பது என் தெரிவு மட்டுமே அதற்குள் எவரும் தலையிட முடியாது என்பதில் நான் தெளிவாக உள்ளேன். உங்களது

“You 2” குறும்படம் ஒரு பாலின புணர்ச்சியை மய்யப்படுத்தியதாக இருந்தது. ஒரு பாலின புணர்ச்சிபற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?

"You 2” ஒருபாலின புணர்ச்சியை மய்யப்படுத்திய குறும்படமல்ல. ஒரு சோடி அது ஆண் பெண்ணாகவோ, ஆண் ஆணாகவோ, இல்லாவிட்டால் பெண் பெண்ணாகவோ இருக்கலாம். அதையும் விட்டால் இரு மிக நெருங்கிய நண்பர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். இப்படியான எந்த உறவிற்குள்ளும் ஒருவரையொருவர் ஆதிக்கம் செய்யும் தன்மை எம்மை அறியாமலேயே வந்து விடுகின்றது என்பதுதான் எனது இக்குறும்படத்தின் கரு. நான் தெரிந்து கொண்ட சோடி இரு பெண்கள் அவ்வளவே ஒருபாலினப் புணர்ச்சியைப் பற்றி எனது அபிப்பிராயம் என்றால் ஒன்றுமில்லை என்பதுதான் என் பதில். இதில் அலட்டிக்கொள்ளவதற்கு என்ன இருக்கிறது. இருவர் விரும்புகின்றார்கள். அவர்கள் தமது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் அவ்வளவே. இவர்களும் ஓர் விழும்புநிலை மக்களே அவர்கள் வாழ்வு முறைக்கு எதிராக நடாத்தப்படும் அநியாயங்களுக்குக் குரல் கொடுப்பதுதான் என் போன்றோரின் கடமை. வேண்டுமானால் ஒருபாலினர்களைக் கொச்சைப் படுத்தி விமர்சிப்பவர்கள்மேல் எனது கருத்தை வேண்டுமானால் ஒற்றை வரியில் சொல்கின்றேன். "Just grow up guys”

ஒரு பெண்ணியவாதியாக, சமகால பெண்கள் படைப்புக்களில் உதாரணமாக அம்பையிலிருந்து குட்டி ரேவதி ஈறாக மாலதிமைத்ரிவரை, பெண்ணுறுப்புகளின் பிரஸ்தாபம் அதிகமும் காணப்படுவதுபற்றி உங்களது கருத்து யாது? இதில் ஒரு கலை இலக்கியவாதியாக உங்களது அபிப்பிராயம் என்ன?

இது சம்மந்தமாகப் பல சர்ச்சைகள் இந்தியாவில் இன்றும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சங்ககாலம் தொடக்கம் இன்று விளம்பரங்கள் வரை பெண்களின் உறுப்புக்களை தங்கள் தங்கள் தேவைக் கேற்ப உபயோகித்துத்தான் (முக்கியமாக ஆண்கள்) வருகின்றார்கள். ஆனால் பெண் படைப்பாளிகள் தங்கள் பெருமையை, நோவை, கோவத்தை, இயலாமையைப் படைப்புக்கள் மூலம் கொண்டுவரும் போது துள்ளிக்குதிக்கின்றார்கள். எல்லாமே தங்களால் மட்டும் செய்யப்பட வேண்டும் என்ற அதிகாரதனத்தினுள் வாழப்பழகிக் கொண்ட ஆண்களுக்கு பெண்கள் இயல்பாக தம் உறுப்புக்களை படைப்பினுள் பாவிப்பது அச்சத்தைக் கொடுப்பதாக உள்ளது. பெண் உறுப்புக்கள் தம் கட்டுப்பாட்டிற்குள் என்றென்றும் இருக்கவேண்டும் என்ற ஆண்களின் ஆசை தம் கைவசமிருந்து நழுவிகொண்டு போகும் போது தமக்கான இயலாமையை அடையாளப்படுத்தி விடும் என்று அஞ்சுகின்றார்கள்

ஒருபோது, இலங்கையில் தமிழ்ப் பெண்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் ராணுவத்தின் வல்லுறவுகள் குறித்த ஆழ்ந்த மனிதநேயமும் மிக்க கொடூரமும் துயருறுத்துவதுமான ஒரு விஷயத்தில் ராணுவத்தின் செயலுக்கு சார்பான கருத்தினை உரைத்ததாக ஒரு விமர்சனம் எழுந்தது.

அது உண்மையானால் அதற்கு என்ன விளக்கமளிக்க விரும்புகிறீர்கள்? அது மிகப் பழைய கதை மீண்டும் கிளறுவானேன். இருந்தும் சின்னதாக ஒரு விளக்கம். தமிழச்சியாய் இருக்கும் நான் ராணுவத்தின் அராஜகத்திற்கும், வன்முறைக்கும் சார்பாகக் கருத்தினை உரைக்கும் அளவிற்கு அறிவற்றவளல்ல, போர், அராஜகம் என்பதனை என்னால் எப்போதும் ஒத்துக்கொள்ள முடியாது. இயக்க தலைமையின் கீழ் கட்டளைக்குப் பணிந்து ஆயுதம் தூக்கி பிற உயிரைக் கொல்லும் ஒரு போராளியின் அப்போதைய மனநிலையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு அரசின் ஆணையின் கீழ் போரிட வந்த ராணுவச்சிப்பாய்களின் மனநிலையை என்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் உள்ளது. மனிதாபிமானம், உளவியல் என்ற வகையில் பார்க்கும் போது, எதிரிகளின் நடுவே மொழி, புவியியல் அமைப்பையறிந்திராத முற்றும் புதிதான ஓர் பிரதேசத்தின் நடுவில் அகப்பட்டுக் கொண்ட ஓர் அரச ஊழியனான ராணுவச்சிப்பாயின் மனநிலை அப்போது எப்படியிருந்திருக்கும் என்பதாய் என் கருத்தை வழங்கியிருங்தேன். இடமறிந்து கதைத்தல் வேண்டும் என்று சொல்வார்களே அதில் நான் கவனம் செலுத்தவில்லை. விடுதலைப்புலிகளிற்காகக் கோஷக்கவிதை பாடும் தன்னைக் கவிஞை என்று சொல்லிக் கொள்ளும் ஒருவருக்கு என் கருத்து விஷமத்தைக் கொடுத்து விட்டது. பத்திரிகையில் கிழிகிழி என்று கிழித்துவிட்டார் அவ்வளவே.

குறும்பட, நாடக தயாரிப்பாளர் என்ற வகையில் முந்திய காலங்களில் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அத் துறைகளில் விழுந்துள்ள தொய்வுக்கு காரணம் எதுவாக இருக்குமென நினைக்கிறீர்கள்?

ஒட்டு மொத்த தொய்வைக் கேட்கின்றீர்களா? என்னைக் கேட்கின்றீர்களா என்று புரியவில்லை. என்னை என்று எடுத்துக் கொண்டால் குறிப்பிடும் படியாக பல நல்ல குறும்படங்களை இயக்கியதால் இனிமேல் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றேன். சென்ரிமெண்டல் கருவை நான் ஒரு போதும் அணுக விரும்புவதில்லை. அது இலகுவில் பெயரை வாங்கித் தந்து விடும், ஆனால் ஆரோக்கியமான காத்திரமான கலைப்படைப்பாய் அது அமையாது. புதிதாகச் சொல்லப்படாத கருவைப் புதிய முறையில் தருவேண்டும் என்பதே என் விருப்பம். சில கருக்கள் என் மனதில் இருக்கின்றன, ஆனால் இன்னும் அவற்றை நான் பிரதியாக்கவில்லை, அத்தோடு குறும்படம் என்பதிலிருந்து முழுநீளத் திரைப்படம் என்ற அளவிற்கு முயற்சி செய்யலாம் என்றும் எண்ணியிருக்கின்றேன். அதற்கு நீண்ட கால அவகாசம் தேவை. தொழிற்நுட்ப பக்கத்தில் என்னோடு வேலை செய்யப் பலர் விரும்புகின்றார்கள், நான் தான் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றேன். மேடை நாடகம் என்று எடுத்துக் கொண்டால், போன வருடம் நாட்டு சூழ்நிலை காரணமாகச் செய்வதில்லை என்று முடிவெடுத்தேன். இந்த வருடம் மண்டபம் கிடைக்கவில்லை, அடுத்த வருடம் சித்திரை இரண்டு நாட்கள் மூன்று நாடகங்ளை மேடை ஏற்ற உள்ளோம். மிகவும் தரமான நாடகங்கள். எனவே மேடை நாடகத்தில் தொய்வு ஏற்படவில்லை என்பது என் கருத்து.

பூர்வீக குடிகள் சம்பந்தமான ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். அவர்களது கலை இலக்கிய பண்பாட்டு தளங்கள் சுவாரஸ்யமானவை. இந்தவகையில் தற்போதைய பணி சார்ந்த கடமைகளினால் உங்களது கலை இலக்கிய முயற்சிகள் அடைந்த சாதக பாதக அம்சங்கள் என்ன?

அந்த உலகம் முற்றிலும் வேறானது. புதிது புதிதாக எதையாவது நாளாந்தம் கற்றுக் கொண்டே இருக்கின்றேன். அவர்களது பட்டறை பலவற்றிற்கும் செல்வதுண்டு. அவர்களோடு இணைந்து தொண்டு வேலைகளும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். பல கலைநிகழ்சிகளிலும் பங்களித்திருக்கின்றேன். எனது கலைக் இலக்கியப் பணிகள், எனது வேலைப் பணிகள் இரண்டும் வௌ;வேறான தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டையும் நான் மிகவும் அனுபவிக்கின்றேன். அவர்களின் நடனம் ஒன்றை எமது நாடகநிகழ்வில் மேடை ஏற்றலாம் என்ற எண்ணம் இருக்கிறது, நேரம் போதுமானதாகவிருந்தால் நிச்சயம் அடுத்த வருட நிகழ்வில் இணைத்துக் கொள்வேன்.