Sunday, October 28, 2012

உதவி நண்பர்களுக்கு எம்மாலான உதவி




ஒரு நல்ல விடையத்தியத்திற்கு என்னாலான உதவியைச் செய்யும் பொருட்டு இந்த நிகழ்வில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கலந்து கொள்கின்றேன். உதவி நண்பர்களுக்கு எனது நன்றிகள்.
பின்னணிக் காரணங்கள் ஏதுமின்றி, குழந்தைகளின் இலக்கியங்களை அவர்கள் பார்வையில், அவர்கள் உலகைப் புரிந்துகொண்டு அளவுகோல்களை அகற்றி, என் பார்வையில் உங்கள் முன்னே வைப்பது என்பது மிகவும் சவாலான விடையம், இருந்தும் முடிந்தவரை முயல்கின்றேன்.
குருவிகளின் கீச்சிடும் ஒலிகளும், சேவல்களின் அதிகாரக் கூவல்களும், கோயில் மணியோசையும், மெல்ல வீசும்காற்றோடு கலந்துவரும் மல்லிகையும் சாணமும் கலந்தமணங்களும், கிழக்கு வானத்தில் செந்நிறப்பந்தாய், இருண்டிருந்த இரவை ஒளியேற்றும் சூரியனும், என் சின்னவயதுக் காலைகள் இப்படித்தான் அதிகமிருந்தன.
நித்திரைகள் அற்ற இரவுகளில் விடியல்கள் எப்படி அடையாளப்படுத்தப்படும்? துப்பாக்கி வேட்டுக்களும், காற்றோடு கலந்து வீசும் பொசுங்கிய மாமிச வீச்சமும், கூரை எரியும் விடியல்களும். இவர்கள் சப்பாத்துக்களுக்குள் எப்படி என்னைப் பொருத்திப் பார்ப்பதென்று புரியவில்லை.
சின்னஞ்சிறிய ப+க்கள் - சின்னஞ்சிறிய கதைசொல்லிகளின் எழுத்தினாலான தொகுப்பு இது. இதில் 12 கவிதைகளும், மூன்று சிறுகதைகளும், ஒரு கட்டுரையும், மூன்று விமர்சனக் குறிப்புக்களும் அடங்கியுள்ளன.
இந்தத் தொகுப்பை முதல் முதலில் கையிலெடுத்துத் தட்டிப் பார்த்த போது படைப்புகளின் கீழ் எழுதியவரின் பெயரும் அவர் வாழ்ந்துவரும் இல்லங்களின் பெயர்களுமான மாணிக்கவாசகர் சிறுவர்இல்லம், விபுலானந்தர் சிறுவர்இல்லம் என்றிருந்தன. நான் படைப்புக்களைப் படித்துப் பார்த்த போது கவிதைகள் ப+க்கள், மரம், மழை, நட்பு, அம்மா, போன்றவற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன. “வாழ்க்கையின் இழப்பு” என்ற ஒரு கவிதையில் மட்டும்தான் யுத்தத்தின் அடையாளத்தைக் காணக்கூடியதாகவிருந்தது. அதே போல் சிறுகதைகளிலும் ஒரு சிறுவன் மட்டும்தான் “எனது கதை” என்ற தலைப்பில், யுத்தத்தில் தான் பெற்றோரை இழந்தமையைக் கதையாச் சொல்லியிருக்கின்றான்.
இங்கேதான் என்னால் பெரியவர்களின் உலகம், குழந்தைகளின் உலகம் என்ற வேறுபாட்டைக் காண முடிகின்றது. பெரியவர் என்ற வகையில் போர்சூழலில் வாழ்ந்து வரும் குழந்தைகளிடமிருந்து நான் எதிர்பார்த்தது இழப்புக்களையும், துன்பங்களையும், ஏமாற்றங்களையும் மட்டுமே. அதிலும் அனைத்தையும் இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வரும் குழந்தைகளிடம் எழுதுவதற்கு வாழ்கைபற்றிய ஏமாற்றங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக என் மனதில் பதிந்திருக்கின்றது என்பதை நான் இங்கே வெட்கத்துடன் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.
போர் சூழலில் பிறந்து வளர்ந்து, அனைத்தையும் இழந்து, இல்லங்களில் வாழும் இக்குழந்தைகள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. இயற்கைமேல் இவர்கள் நம்பிக்கை உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். சிறுவர்களான இருந்த போது போர்ச்சூழலில் அனுபவித்த துன்பங்களையும், இழப்புகளையும் “மரணத்தின்வாசைன” சிறுகதைத் தொகுப்பில் போரின் குரூரத்தை அனுபவித்த சிறுவனின் கதைகள் பல பதியப்பட்டிருக்கின்றன. அதே போல் தீபச்செல்வனும் கவிதைகள் மூலம் பதிந்திருக்கின்றார்.
போர்ச்சூழலில் பிறந்து வளர்ந்த கதை சொல்லிகளான த.அகிலன், தீபச்செல்வன் போன்றோர் பெரியவர்களானதும் தமது படைப்புக்களில், சிறுவர்களின் பார்வையிலிருந்து போரின் அனர்த்தங்களைத்தான் அதிகம் சொல்லியிருக்கின்றார்கள். இங்கே குழந்தைகளின் பார்வையும், அவர்கள் பெரியவர்களானபின் கொண்டிருக்கும் பார்வையும் நிச்சயம் வேறுபட்டிருக்கின்றது. இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.
தமிழில் குழந்தைகளுக்கான கலைப்படைப்புக்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. குழந்தை இலக்கியங்கள் ஓரளவுக்கேனும் இருந்தாலும் திரைப்படங்கள், நாடகங்கள், போன்றவை அறவே காணமுடியாமல் உள்ளது.
குழந்தைகளுக்கான தமிழ் இலக்கியங்கள் பெரியவர்களால் அவர்கள் கட்டமைத்த உலகிற்குள் இருந்து கொண்டு, இப்படித்தான் குழந்தைகள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத்தப்பட்ட நீதிக்கதைகளாகவே அனேகம் காணக்கூடியதாக உள்ளது. குழந்தைகளுக்கான மொழியில் அவர்களைக் கவரக் கூடிய வகையில் வேற்று மொழிகளில் காணப்படும் குழந்தை இலக்கியங்கள் போன்று தமிழில் மிகக் குறைவாகவே காண்படுகின்றது.
குழந்தைகள் கதைசொல்லிகளாக இருப்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. படம் வரைதல் மூலமே குழந்தைகள் கதை சொல்லப் பழக்கப்பட்டிருக்கின்றார்கள். ஏதாவதொரு அனர்த்தம் நடந்து விட்டால் அவர்களிடம், அவர்களின் மனதிலுள்ளதைச் சொல்லும் படி வெள்ளைப் பேப்பரும் கலர் பென்சிலுமே அதிகம் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இத்தொகுப்பில் குழந்தைகளே தமக்கான இலக்கியத்தைப் படைத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதற்கான முயற்சியைச் செய்த, செய்துவரும் உதவி நண்பர்கள் எனது நன்றிகளும், பாராட்டுக்களும்.
வாழ்க்கைத் தரத்தில் உயரத்திலிருக்கும், கனடா போன்ற ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டு, குழந்தை வளர்ப்பு என்பதை மிகவும் சிரமமான ஒன்றாகவே நாம் பார்க்கின்றோம். அவர்களை ஒழுங்காக வளர்த்தெடுக்கவேண்டும். முறையான கல்வியைக் கொடுக்க வேண்டும். முடிந்த வரை டொக்டர் அல்லது என்ஜினியர். சரிவராவிட்டால் கரேபியனுக்கு அனுப்பியாவது அவர்களை பெயர் சொல்லும்படி உருவாக்கி விட வேண்டும். பின்னர் கலியாணம் இப்படி எத்தனை தொல்லைகள். இப்படித் தொல்லைகளுக்குள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் எம்மால் உதவி நண்பர்களின் சப்பாத்துக்குள் எம்மை ஒருபோதும் பொருத்திப் பார்க்கவே முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் இத்தனை வருடங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நான் போர்ச் சூழலில் வாழும் எம்மக்களுக்கான எந்த உதவியையும் செய்யவில்லை என்பதையும் வெட்கத்தோடு ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் எம்மிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை என்பதைத் தெளிவாகவே தெரியப்படுத்தியிருக்கின்றார்கள். அவர்களுக்கு எம்மாலான உதவியைச் செய்வது எமது கட்டாய கடமையாகும்.

இந்தத் தொகுப்பை ஒரு அறிமுகம் செய்யுங்கள் என்று நண்பர்கள் கேட்டபோது போரும் குழந்தைகளும் என்ற தலைப்பில் தகவல்கள் எடுக்கலாம் என்று கூகில் பண்ணிப் பார்த்தேன். ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள், பல்கலைக்கழகத்தள அளவுகளிலிருந்து வெளியிடப்பட்டிருக்கின்றன. முதலாம் உலகப்போரிலிருந்து, இன்று சிரியா வரையிலான ஆய்வுக்கட்டுரைகள். பார்த்த போது வெறுப்புத்தான் ஏற்பட்டது. மேற்குலகநாட்டுப் படித்தவர்களுக்கு இவ்வனர்த்தங்களும், குழந்தைகளும் ஒரு ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு மட்டும்தானா? தமக்கான டிகிறியை அவர்கள் பெற்றுக்கொள்வது மட்டும்தான் அவர்கள் நோக்கமாக உள்ளதா? தொண்டர்நிறுவனங்களும், இவற்றினால் பிழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். தம்மை நாகரீக மக்களென்று அடையாளப்படுத்தும் நாடுகளும் அம்மக்களின் பங்குகளும் இதில் என்ன? மக்கள் கையறுநிலையில் உள்ளார்கள். அனைத்து அரசுமே மக்களுக்காக இயங்காமல் தமக்காக இயங்கிக்கொண்டிருக்கின்றது. உதவி நண்பர்கள் இதற்குள் வெறும் சிறு துரும்பு மட்டுமே. அவர்கள் தூக்கமுயலும் சிறுதுரும்பின் ஒரு நுனியை நாமும் தூக்க உதவுவோம் என்று கேட்டுக்கொண்டு இனிமேல் எமது நாட்டுக்குச் செல்ல இருப்பவர்கள் வெறும் விடுமுறைக்காக மட்டும் போய்வராமல் ஒரு சிறு வேலைத்திட்டத்தை எடுத்துச்செய்ய முன்வந்தால் சிறுவர் இல்லங்களில் வாழும் குழந்தைகள் போல் பலருக்கும் இது பயனளிக்கக் கூடியதாகவிருக்கும். வெறுமனே அகராதியிருந்து மட்டும் அனாதை என்ற சொல்லை அகற்றிவிட்டால் போதாது. அதற்கான செயற்திட்டங்களில் எமக்கான பங்களிப்பு எதையாவது செய்ய வேண்டியது புலம்பெயர் மக்களின் கடமையும் கூட. விதவைகள், விபச்சாரிகள், அனாதைகள் என்ற பதங்களை மட்டும் மாற்றிவிட்டால் போதுமா அதற்காக நாம் செயற்பட வேண்டாமா?
புரட்சியாளர் அன்சலா டேவிஸ் உலகில் சிறைக்கூடங்களே இருக்கக் கூடாது என்றார். சிறுவர் இல்லங்கள் இல்லாத உலகம் ஒன்று உருவாகுமா?
சின்னஞ்சிறிய ப+க்கள் தொகுப்பில் தமது எழுத்தைப் பதிந்த குழந்தைகளுக்கும், அதனைத் தொகுக்க உதவிய உதவி நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். இக்குழந்தைகள் தொடர்ந்தும் எழுத வேண்டும், அதற்கான உதவியை உதவி நண்பர்களுக்கு நாமும் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம்.