ஒரேயொரு வழுக்கும்
சப்பாத்து மட்டும்தான்
என் தோழியிடமிருந்தது
பனி, மழை, வெய்யில்
எதுவாகினும்
அவள் அதை அணிந்து நடப்பதால்
வழுக்கி, வழுக்கி விழுந்து
அடிபட்டதில்
உடலெல்லாம் காயம்.
ஒருநாள் கையில் காயத்துடன்
அவள் வந்தாள், கேட்டால்
சப்பாத்து வழுக்கி விழுந்ததால்
பட்ட அடியென்றாள்
இன்னொருநாள்
காலை நொண்டிக்கொண்டு
அவள் வந்தாள், கேட்டால்
வழுக்கி விழுந்ததால்
பட்ட அடியென்றாள்.
இன்னுமொருநாள்
கன்னத்திலும்,
இன்னுமொருநாள்
முதுகிலும்
சப்பாத்து வழுக்கி
அவளுக்கு காயத்தை
உண்டாக்கியிருந்தது.
நான் அவளின் பிறந்தநாளுக்கு
பனி, மழை, கோடையென
காலமாற்றத்தற்கேற்ப
மூன்று சப்பாத்துக்களைப் பரிசளித்திருந்தேன்
அடுத்த நாளும் அவள்
நெற்றியில் காயத்துடனே வந்தாள்
கேட்டதற்கு,
குளியல் அறையில் வழுக்கிவிழுந்ததாகச்
சொன்னாள்.
அந்தக்காயம்
சப்பாத்தின் குதிபோலிருந்தது.