Wednesday, October 19, 2011

“உனையே மயல் கொண்டு”



‘படைப்பாளி விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்ற கருத்து மிக வலுவாக பல்வேறு வடிவங்களில் இருந்து வருகின்றது. இவ்வாறான எண்ணம் நம் சூழலில் தோன்றவும் காலப்போக்கில் உறுதிப்பட்டு வரவும் பல காரணங்கள் இருக்கின்றன. நம் மொழியில் விமர்சன தர்மத்தைப் போற்றிக் கூறாத படைப்பாளியும் இல்லை, விமர்சனத்தை உள்ளு+ர அசௌகரியமாகக் கருதாத படைப்பாளியும் இல்லை. விமர்சகரிடம் படைப்பாளி எதிர்பார்ப்பது விமர்சனம் என்ற போர்வையில் நிகழ்த்தப்படும் பராட்டுக்களைத்தான்.
விமர்சகனிடமிருந்து வாசகன் படைப்புச் சார்ந்து பல நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவ்வாய்ப்பையே தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகத்தான் நம் படைப்பாளி பார்க்கின்றான். வாசகன் வாசிப்புச் சார்ந்த நுட்பங்களில் தேர்ச்சி பெற்று மிக மேலான படைப்பாற்றலை படைப்பில் எதிர்பார்க்கும் சூழல் உருவானால் அவனைத் தன்னால் திருப்தி செய்ய முடியாமல் போய்விடும் என்ற கவலை படைப்பாளியை உள்ளு+ற அரித்துக் கொண்டிருக்கிறது. கூடுமானவரையில் சகபடைப்பாளிகளின் படைப்புக்களைப் புகழ்ந்து கூறி அதற்குப் பதிலாகத் தனது படைப்புகளுக்குச் சகபடைப்பாளியின் பராட்டை உறுதி செய்து வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமான செயலாக நம் படைப்பாளிகளுக்குப் படுகிறது.

படைப்பாளி விமர்சனத்தில் ஈடுபடும் போது தனது படைப்புகளுக்கான ஆதரவை இழக்கும் சூழலை அவனே உருவாக்கிக் கொள்கின்றான் என்ற எண்ணமும் இங்கு இருந்து வருகின்றது. கண்ணெட்டும் தூரம் வரையிலும் வாசகனைக் காணக்கிடைக்காத சூழலில் சக படைப்பாளியின் ஆதரவை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி, தனக்குக் கிடைத்திருக்கும் சிறு வெளியை விமர்சனக் கருத்துக்களை வெளிப்படுத்தி இழக்கவோ, குறைத்துக் கொள்ளவோ விரும்புவதில்லை. ஒரு படைப்பாளி விமர்சகனாகச் செயல்படும் போது விமர்சனத்தில் அவன் வெளிப்படுத்திய கருத்துக்களின் எதிர்வினையாக அவன் படைப்பு தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறு எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் படைப்பாளி விமர்சகனாவும் செயல்படுவது தமிழ்ச் சூழலில் புத்திசாலித்தனமான காரியமாக இல்லை. தனக்கென்று ஒரு பார்வையும் விமர்சனமும் கொண்ட படைப்பாளிக்கு இலக்கிய வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருக்கும்’.

காற்றில் கலந்த பேரோசை - சுந்தர ராமசாமி

“உனையே மயல் கொண்டு” என்ற நடேசனின் இரண்டாவது நாவலை எந்தத் தளத்தில் இருத்தி விமர்சிப்பது என்ற கேள்வி எனக்குள் எழுந்த வண்ணமிருக்கின்றது. உலக இயக்கியங்களில் முன்னணியிலிருக்கும் நாவல்களைத் தேடி வாசிக்கும் பரிச்சயம் கொண்ட எனக்குள் தரமாக படைப்பு என்பதற்கான ஒரு தளம் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டது. இருந்தும் உலக இலக்கியங்களுடன் நடேசனின் நாவலை ஒப்பீட்டளவில் பார்க்க முடியாது என்ற தார்பரியத்தை அறிந்தவள் என்ற வகையிலும், தமிழ் இயக்கியம், அல்லாவிடின் புலம்பெயர் இலக்கியம் என்ற தளத்தில் இருத்திப் பார்ப்பதா? அன்றேல் ஒப்பீட்டுத் தன்மையை விடுத்து ஒரு ஆர்வமுள்ள எழுத்தாளின் படைப்பாக மட்டுமே பார்த்து விமர்சிப்பதா? வெறுமனே ஆர்வமுள்ள படைப்பாளி என்ற பார்வை, பல விட்டுக்கொடுப்புகளுக்கு விமர்சகரைத் தள்ளிவிடும்.

புலம்பெயர் இலக்கியங்கள் எப்போதுமே வரவேற்கப்படவேண்டியவை. அதே நேரம் நேர்மையான விமர்சனங்களையும் அவை வேண்டி நிற்பவை என்ற எண்ணத்தோடு எனது விமர்சனத்தை வைக்கின்றேன்.

“உனையே மயல் கொண்டு” என்ற இந்த படைப்பு புலம்பெயர் இலக்கியத்தில் இதுவரை கூறப்படாத கருத்தளங்களைத் தாங்கி நிற்பது இப்படைப்பிற்கு வலுவைச் சேர்க்கின்றது. இருந்தும் இக் கருத்தளங்கள் விரிவாகவும், ஆழமாகவும் கூறப்பட்டதா என்றால்? விமர்சகர் என்ற வகையில் இல்லை என்றே என்னால் கூற முடியும். மிகவும் தட்டையான ஒரு பார்வையைத் தான் எழுத்தாளர் நடேசன் கையாண்டுள்ளார். இவரின் இந்த எழுத்து முறையை இவரின் முதல் நாவலான “வண்ணாத்திக்குளம்” எனும் நாவலிலும் காணக்கூடியதாக இருந்தது. படைப்பாளி தனது சமூக நோக்கத்தை வலுவோடு நிறுவும் அளவிற்கு படைப்பு வலுவானதாக இருக்க வேண்டும். படைப்புகள் வலுவான சமூக நோக்கத்தை மேலோட்டமாக வழங்கினால் வாசகனால் அதனை ஆழமாக அறிந்து கொள்ள முடியாமல் போய் விடும்.

“உனையே மயல் கொண்டு” நாவல் “பைபோலர்” நோயால் பாதிக்கப்படும் சோபா எனும் ஒரு பெண்ணைச் சுற்றியதாக அமைத்திருக்கின்றது. இருந்தும் சோபாவின் கணவனான சநதிரனே இந்நாவலின் முக்கிய நாயகன். நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணால் கிடைக்காத உடல் சுகத்திற்கான ஏங்கும் ஒரு சுயநல மனிதனாக சந்திரன் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
சோபாவில் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட துர்சம்பவங்கள் அவளின் மகப்பேறிற்குப் பின்பாக “பைபோலர்” நோயாக மாறியுள்ளது. இளம் வயதில் சிங்களக்காடையர்களால் சோபா நடு வீதியில் நிர்வாணமாக்கப்பட்டதும். அவளின் சகோதரனான கார்த்திக் “ரெலோ” இயக்கத்தில் இணைந்து பின்னர் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டதும் அவள் மனதில் ஆழமாகப்பதிந்து அவளை ஒரு நோயாளியாக மாற்றிவிட்டிருக்கின்றது என்று சொன்ன எழுத்தாளர் வாசகர்களின் மனதில் காயம் வரும் வகையில் எந்தச்சம்பவங்ளைச் சித்தரிக்கவில்லை என்பது மிகவும் ஏமாற்றமாகவே உள்ளது. ஈழத்து அரசியலின் இருண்ட பக்கங்களுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நோயாளிக்கும் கொடுக்காத முக்கியத்தை ஒரு ஆணின் பாலியல் தேவைக்கு எழுத்தாளர் கொடுத்திருக்கின்றார். ஒரு ஆணின் பாலியல் தேவையை முன்நிறத்தி நாவல் எழுத எழுத்தாளர் நினைத்திருப்பின் எதற்காக “பைபோலர”; நோயையும், ஈழத்து அரசியலின் மறைக்கபட்ட சம்பவங்களையும் வெறுமனே தொட்டுச் சென்று வீணடிக்க வேண்டும். இந்த இரண்டு கருக்களும் ஆய்வோடு ஒரு முழுநீள நாவலாக வழங்கப்படவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை.
தனது பாலியல் தேவைக்காக சாந்தன், ஜீலியா எனும் வெள்ளை இனப்பெண்ணோடு தொடர்பு வைக்கின்றான். இது இயற்கையானதே. உறவின் தொடர்ச்சியில் ஜீலியா வேறு ஒரு ஆணோடு நெருக்கமாக இருப்பதைக் கண்ட சாந்தன் ஜீலியாவை இவள் வெறும் “விபச்சாரி” என்று பேசிவிட்டுப் போகின்றான். இச் சம்பவங்கள் அனைத்தும், ஜீலியா ஒரு வெள்ளை இனப்பெண்ணாக இருப்பதனால் படைப்பாளியால் சுமூகமாக சித்தரிக்க முடிந்திருக்கின்றது. இந்த ஜீலியா எனும் பாத்திரத்தை ஒரு ஜனனியாகவோ அல்லாவிடின் ஜானகியாகவோ நிறுத்திப் படைப்பாளியால் பார்த்திருக்க முடியுமா? பக்கம் 58 இல் தாய்மை பெண்மைக்கான படைப்பாளியில் பார்வை சொல்லப்படுகின்றது. “இது பெண்களுக்கு மட்டும் உள்ள உயரிய குணமா?” என்ற கேள்வியையும் படைப்பாளி முன் வைத்து, பெண்களுக்குரிய உயரிய உயர்ந்த குணத்தை உறுதிப்படுத்துகின்றார்.
ஆழப்பார்க்கின் பல பலவீனங்களைத் தன்னகத்தே கொண்ட இந்நாவலில், என் மனதில் நிற்கும் ஒரே பாத்திரம் சில பக்கங்களில் மட்டு;ம் வந்து போகும் “மஞ்சுளா” தான். காதலித்துவிட்டோம், பழகிவிட்டோம், பலருக்குத் தெரிந்து விட்டதே என்ற ஒரே காரணத்திற்காக எதிர்காலத்தை எண்ணாது ஒத்துவாராத உறவை இணைத்துக்கொள்ளும் நிலையில் இன்றும் பல பெண்கள் இருக்கும் எமது சமுதாயத்தில், யதார்த்தமாகச் சிந்தித்து இருவரின் எதிர்கால நன்மைக்காகத் தனது காதலைத் துறப்பவள் மஞ்சுளா. இத்தெளிவு எல்லாப் பெண்களுக்கும் இருப்பதில்லை.
சாந்தன் சராசரி ஆணிற்கும் மேலானவன் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெறுவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளான், இந்த சராசரி ஆணுக்கும் மேலானவனுக்கு தனது மனைவியின் மனோவியாதியைப் புரிந்து கொண்டு தக்க சிகிச்சை அளிக்காமல் “மனநோய் என்பதை மறைத்து வைப்பதே எமது நடைமுறை, அந்த மனப்பான்மை இங்கேயும் தொடர்கிறது” பக்கம் 74: என்று எப்படி சராசரிக்கும் கீழாகச் சென்று வசனம் பேச முடிகிறது?
சோபா, ஜீலியா, சாந்தன் போன்றவர்களின் பிரத்தியேகத் தன்மை நாவலில் அடையாளம் காட்டப்படவில்லை என்றாலும் நாவலின் இறுதியில் நோயில் இருந்து மீண்ட சோபா தன் வாழ்வு பற்றித் தெளிவான ஒரு முடிவை எடுப்பது நாவலை வலுப்படுத்துகின்றது.
தனது முதல் நாவலுக்கு தனித்தன்மை கொண்ட “வண்ணாத்திக்குளம்” எனும் தலைபை இட்ட நடேசன் இந்நாவலுக்கு தமிழ் சினிமாத் தனத்துடன் தலைப்பிட்டிருக்கின்றார். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் புலம்பெயர் எழுத்தாளர்களில் நடேனும் ஒருவர் என்பது மறுக்க முடியாதது. இன்னும் கவனம் எடுப்பின் கனமான படைப்புக்களை நடேசனால் தரமுடியும்.


1 comment:

வலையுகம் said...

கறுப்பியின் விமர்சனங்கள்
மிக வென்மையானவை
பகிர்வுக்கு நன்றி