புனலூதிய புகையினுள்
அசைந்து மறைந்தது
உருவமொன்று,
சட்டையை இழுத்து
விட்டுக்கொண்டேன்.
கழுத்து வியர்வையில்
தோய்ந்த மார்பகங்கள்
போர்வைக்குள் அவிந்து, அரித்தன
துருதுருக்கும்
கைகளையடக்கி
சுவரின் கண்களுக்கு
தீனிபோட மறுத்து
சிலையானேன்.
படுக்கையறை
குளியலறை
குசினி
கிணற்றடி
சிவந்த கண்களுடன்
என்னை விழுங்க
தொடரும் அமானுஷ்யம்.
பிடுங்கி எறியப்பட்ட
என் குரல்கள்
செவிகளில் விழாது
சிரிக்கும் உறவுகள்.
பத்துக்கைகள்
விரித்து உடல் அளையும்
அமானுஷ்யத்தின் கழுத்தில்
தொங்கிக்கொண்டிருந்து
என்னிலிருந்து
புடுங்கியெறியப்பட்ட
குரலின் மாலை.
No comments:
Post a Comment