Saturday, March 6, 2021

கருவாலி

கருவாலி


நீ விட்டுச்சென்றபின் நான் 

பேதலிப்பேனென்றெண்ணாதே. 

உழன்றசையும் காற்று எனை உயரத்தூக்கி நடனமாடுகின்றது.

இசையும், நடனமுமாய் நிறைந்திருக்க,

காய்ந்த பீங்கான் மேல் சொட்டுச்சொட்டாய் தெறிக்கின்றது தண்ணீர்.


படுக்கையறையின் துளையொன்றில் பதிந்திருந்த ஒற்றைக்கண்ணை  இப்போது காணவில்லை.

கட்டில் விரிப்பை கலைத்துப்போட்டு உரத்துச்சிரிக்க முடிகின்றது என்னால். 

அதனால், நீ விட்டுச்சென்றபின் நான் பேதலிப்பேனென்றெண்ணாதே. 


நேர் கோட்டை அழித்தாயிற்று. என் கையிலிருக்கும் வெண்கட்டி தாறுமாறாய் கோடுகளை வரைகின்றது. 

கைதட்டி, ஆர்ப்பரித்து நான் வரைந்த கோடுகளை இரசிக்கின்றார்கள். 

நான் இன்னும் நூறு கோடுகளை வரைவேன்.

அதனால், நீ விட்டுச்சென்றபின் நான் பேதலிப்பேனென்றெண்ணாதே.


பல மொழிகள் என் கைவசமிருப்பதை நீ ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

புறாக்களுடனும், கரப்பான் பூச்சிகளுடனும் என்னால் பேசிக்கொள்ள முடிகின்றது. 

நேற்றிரவு வெள்ளெலியொன்று 

எனை முத்தமிட்டுச் சென்றதை உனக்குச்சொன்னால், 

நீ கெக்கலித்துச்சிரிக்கக்கூடும். 

இறுகிய ஒற்றைக் கல்லல்ல இனி நான்.

பல அடுக்குகளைக்கொண்ட கருவாலி.

அதனால், நீ விட்டுச்சென்றபின் நான் பேதலிப்பேனென்றெண்ணாதே.


18-01-2021

No comments: